அதிமுக உட்கட்சித் தேர்தல்; பொதுக்குழு கூட்டம்; தீவிரம் காட்டும் OPS -EPS... யார் கை ஓங்கும்..?
சென்னை: அதிமுகவில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் அக்கட்சியின் பொதுக்குழுவையும், உட்கட்சித் தேர்தலையும் நடத்த ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
முதலில் கிளைக்கழக பதவிகளுக்கு தேர்தல் நடத்திவிட்டு, பிறகு ஒன்றியம், பேரூர், நகரம், மாநகரம், மாவட்டம் என வரிசையாக அதிமுகவில் உட்கட்சித் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல் டிசம்பர் மாதம் கட்சியின் பொதுக்குழுவை கூட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ள அதிமுக தலைமை, அது தொடர்பான ஆலோசனைகளிலும் அடுத்த வாரம் ஈடுபடவுள்ளது.

அதிமுக
இந்திய தேர்தல் ஆணையத்தின் சட்டத்திட்டத்தின் படி கட்சிப்பதவிகளுக்கு உட்கட்சி தேர்தல் நடத்த வேண்டியது அவசியமாகிறது. அதன்படி அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடைபெற்று 5 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால் இப்போது அதனை நடத்த வேண்டிய பெரும் பொறுப்பு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். முன் நிற்கிறது. ஏற்கனவே அவர்கள் இருவருக்கும் இடையே பனிப்போர் நிலவி வரும் சூழலில் உட்கட்சித் தேர்தலை எப்படி சுமூகமாக நடத்தி முடிப்பார்கள் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

ஆளுக்கொரு நிலை
ஜெயலலிதா இருந்தவரை அதிமுக உட்கட்சித் தேர்தல் கப்சிப் என அமைதியான முறையில் நடைபெற்று முடியும். தலைமையால் அடையாளம் காட்டப்படும் நபர்களுக்கு எதிராக யாரும் வாய் திறக்கமாட்டார்கள். ஆனால் தற்போதைய சூழலில் அது போன்று அமைதியான முறையில் அதிமுக உட்கட்சி தேர்தல் நடக்குமா என்பது கேள்விக்குறிதான். தடியெடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள் என்கிற வகையில் இன்று அதிமுகவில் ஆளுக்கொரு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். இதனால் அடிமட்ட தொண்டர்கள் சோர்வும் கலக்கமும் அடைந்துள்ளனர். இது நிச்சயம் அதிமுக உட்கட்சித் தேர்தலில் எதிரொலிக்கும்.

ஆலோசனை
இதேபோல் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறவேண்டிய பொதுக்குழு கடந்த 2020-ம் ஆண்டு அதிமுகவில் நடைபெறவில்லை. கொரோனா காரணமாக அதற்கு விதி விலக்கு பெறப்பட்டது. ஆனால் அதே வேளையில் திமுக காணொலி வாயிலாக பொதுக்குழு கூட்டத்தை நடத்தியதுடன் அனைத்து ஊடகங்களிலும் அந்தக் கூட்டத்தை நேரலை செய்ய வைத்தது. இதனிடையே வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டியுள்ளதால் அது தொடர்பாக வரும் 10-ம் தேதிக்கு பிறகு அதிமுக தலைமைக்கழகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் எனத் தெரிகிறது.

இபிஎஸ் அப்செட்
சசிகலாவின் அதிமுக பிரவேச முயற்சியால் எடப்பாடி பழனிசாமி அப்செட் ஆக உள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் வழக்கமான உற்சாகத்துடன் உலா வந்து கொண்டிருக்கிறார். மேலும், சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து கட்சி நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என அவர் அளித்த பேட்டியும் தினகரன் இல்ல மண விழாவுக்கு தம்பி ஓ.ராஜாவை அனுப்பி வைத்ததும் அதிமுகவை பொறுத்தவரை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகவே கருதப்படுகிறது.

உட்கட்சித் தேர்தல்
அதிமுக உட்கட்சித் தேர்தலை எப்படியும் ஒரே மாதத்தில் நடத்தி முடிக்க வாய்ப்பே இல்லை. ஏனென்றால் தமிழகத்தின் ஏனைய கட்சிகளை விட அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களும், நிர்வாகிகளும், பதவியிடங்கள் உள்ள கட்சி அது. இதனிடையே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் மாதம் இறுதியில் வரவுள்ளதால் அதிமுக உட்கட்சித் தேர்தல் ஜனவரி இறுதியிலோ அல்லது பிப்ரவரி மாதமோ ஒத்தி வைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீதிமன்றத்தில் இது குறித்து விளக்கி கால அவகாசம் பெறும் முயற்சியும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெர்விக்கப்படுகிறது.

பொதுக்குழு உறுதி
ஆனால் பொதுக்குழு தள்ளிப்போக வாய்ப்பே இல்லை என்பதால் இப்போது அது தொடர்பான விவாதம் தான் அதிமுக முக்கிய நிர்வாகிகள் மத்தியில் நடைபெற்று வருகிறது. சசிகலா விவகாரம் குறித்து நிச்சயம் பொதுக்குழுவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் இப்போதே அதனை எதிர்கொள்வதற்கான வியூகத்தை வகுத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. கடந்தவாரம் ஈரோட்டில் செங்கோட்டையன், கருப்பணன், தங்கமணி ஆகியோருடன் தனி மீட்டிங் நடத்தியிருப்பது கவனிக்கத்தக்கது.

பலப்பரிட்சை
இப்படி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெறக் கூடிய அதிமுக உட்கட்சித் தேர்தலிலும், பொதுக்குழுவிலும் யார் கை ஓங்கப் போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. ஓ.பி.எஸ். -இ.பி.எஸ். ஆகிய இருவருமே பலப்பரிட்சைக்கு தங்களை தயார் செய்து கொள்ள்ளத் தொடங்கிவிட்டனர்.












Click it and Unblock the Notifications