திமுகவை சீண்டிய விஜய்.. எங்களை தொடவே இல்லையே! இதுமட்டும் நடந்தால்.. அதிமுகவுக்கு ஆசைய பாருங்களேன்!
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு வெற்றிகரமாக அமைந்ததில் உற்சாகத்தில் இருக்கிறார் அக்கட்சியின் தலைவரான நடிகர் விஜய். இந்த நிலையில் திமுகவை நேரடியாக தாக்கிப் பேசியதால் குதூகலத்தில் இருக்கும் அதிமுகவினர் வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைய வாய்ப்பு இருந்தால் 2026-ல் ஆட்சி அமைப்பது உறுதி என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி-சாலையில் நேற்று நடைபெற்றது. கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பெயர் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் அதற்கு பிறகாகவே கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக அரசியல் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வந்தார் நடிகர் விஜய். குறிப்பாக சினிமாவில் இருந்து விலகி முழுமையாக அரசியலில் ஈடுபட போகிறேன் என அவர் அறிவித்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.
இது ஒரு புறம் இருக்க அவர் நடிப்பில் வெளியான தி கோட் திரைப்படமும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இதை அடுத்து தற்போது கடைசி படத்தில் நடித்து வரும் விஜய் சொன்னது போலவே அரசியலிலும் களம் இறங்கி விட்டார். தொடர்ந்து பல மாதங்களாக அரசியல் கட்சி தொடர்பாக ஆலோசனைகள் அறிக்கைகள் விட்டு வந்த விஜய் இறுதியாக அரசியலில் குதித்தே விட்டார். நேற்று விக்கிரவாண்டி வி-சாலை பகுதியில் நடைபெற்ற மாநாடு பெரிய அளவில் விஜய்க்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

லட்சக்கணக்கான தொண்டர்கள் ஆரவாரத்திற்கிடையே ராம்ப் வாக் வந்த விஜய், அவர்களது உற்சாக வரவேற்பு ஏற்றுக் கொண்டதோடு அவர்கள் வழங்கிய துண்டை தனது தோளில் போட்டுக்கொண்டு நடந்தார். தொடர்ந்து மேடையிலும் கண் கலங்கவே காட்சியளித்தார் விஜய். சினிமா படங்களில் வருவது போலவே விஜயின் வசனங்களும் அவரது ஆக்சன்களும் இருந்தது. இது சமூக வலைதளங்களில் ஒருபுறம் விமர்சனங்களை பெற்றாலும் விஜய் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் ஆரவாரம் செய்தனர்.
தொடர்ந்து பிளவுவாத அரசியலுக்கு எதிராக தான் செயல்படுவேன் என பாஜகவை மறைமுகமாக விமர்சித்தாலும் தமிழகத்தில் திமுகவுக்கு எதிராகத்தான் தனது அரசியல் இருக்கும் என்பதை அழுத்தமாகவே பேசி இருந்தார். குறிப்பாக பெரியார், அண்ணா பெயரை சொல்லிவிட்டு திராவிட மாடல் என்ற பெயரில் ஒரு குடும்பம் கொள்ளையடிக்கிறது என நேரடியாகவே பேசியது திமுகவினரை கொதிப்படையச் செய்திருக்கிறது. தொடர்ந்து திமுகவினர் சமூக வலைதளங்களில் விஜய்க்கு எதிராக விமர்சனக் கணைகளை தொடுத்து வருகின்றனர். எம்ஜிஆர், தொடங்கி ஜெயலலிதா, விஜயகாந்த், சீமான் என திமுகவை விமர்சனம் செய்ய ஆயிரம் பேர் புறப்பட்டாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது என பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க விஜயின் பேச்சால் உற்சாகத்தில் இருக்கின்றனர் அதிமுகவினர். தொடர்ந்து தனது பேச்சில் எம்ஜிஆரை குறிப்பிட்டு விஜய் பேசினார். கூத்தாடி என ஒதுக்க நினைத்த எம்ஜிஆர் தான் மக்கள் மனதில் ஆழமாக நிலைத்து நிற்கிறார் என பேசியதோடு அதிமுக குறித்த எவ்வித விமர்சனங்களையும் அவர் வைக்கவில்லை. மேலும் கடந்த ஆட்சி என்றோ அல்லது குறிப்பிட்ட கட்சி என்றோ அதிமுக தொடர்பாக எந்தவித கருத்துக்களையும் விஜய் வைக்கவில்லை.
இறுதியாக கூட்டணிக்கு தயார், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என விஜய் பேசியது அதிமுகவுக்கான கூட்டணி சமிக்கை என்கின்றனர் அதிமுகவினர். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு - பவன் கல்யாண் கூட்டணி போல தமிழகத்திலும் எடப்பாடி பழனிச்சாமி - விஜய் கூட்டணி அமைந்தால் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications