திமுகவில் இணைந்தது ஏன்? - அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சின்னசாமி சொன்ன காரணம்!
சென்னை: ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக தலைமை சரியான முறையில் இயங்கவில்லை என்றும் உழைப்பவர்களுக்கு அங்கு வேலை இல்லை என்றும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சின்னசாமி விமர்சித்துள்ளார். இன்று திமுகவில் இணைந்த சின்னசாமி, எடப்பாடி பழனிசாமி தலைமையை விமர்சித்துள்ளார்.
கோவை சிங்காநல்லூர் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முக்கிய நிர்வாகியுமான சின்னசாமி, இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஆகவும் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவையின் செயலாளராகவும் இருந்தார் சின்னசாமி. முன்னாள் எம்.எல்.ஏ சின்னசாமி அண்ணா தொழிற்சங்க பணத்தை கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அண்ணா தொழிற்சங்க பண மோசடி விவகாரம் தொடர்பாக சின்னசாமியை சென்னை பெருநகர குற்றப்பிரிவு போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கில் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார்.
2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொழிற்சங்க பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து அப்போதைய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களான எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் இவரை நீக்கினர். தன்னை அதிமுகவிலிருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் சின்னசாமி வழக்கும் தொடர்ந்தார். ஓபிஎஸ் - எடப்பாடி ஆகிய இருவரையும் துரோகி எனவும் அவர் விமர்சித்தார்.
அதன் பின்னர் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவில் சேர்ந்து அங்கும் தொழிற்சங்க பேரவை செயலாளராக பொறுப்பேற்றார். கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பாஜகவில் இணைந்தவர் சில மாதங்களில் மீண்டும் அதிமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் தற்போது அவர் திமுகவில் இணைந்துள்ளார். இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் சின்னச்சாமி.
இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஆர்.சின்னச்சாமி, "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயுள்ளத்தோடு இன்று என்னை திமுகவில் இணைத்துள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 2006 சட்டசபை தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் வெற்றி பெற்றேன். மீண்டும் 2011 ஆம் ஆண்டும் மீண்டும் சட்டசபை தேர்தலில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.
அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராகவும் என்னை நியமித்தார் ஜெயலலிதா. நான் பொறுப்பேற்கும்போது வெறும் 50 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தார்கள். 4 ஆண்டுகளில் 11 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்து அதிமுகவுக்கு வலு சேர்த்தேன்.
இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் உழைப்பவர்களுக்கு வேலை இல்லை. யாரெல்லாம் தனக்கு சாதகமாக இருக்கிறார்களோ அவர்களை வைத்து கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மிக நன்றாக இருப்பதாக சாமானிய மக்கள் பேசுகின்றனர். அரசியல் ரீதியாக சிலர் விமர்சிக்கிறார்களே தவிர மக்கள் மத்தியில் திமுக ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர். மீண்டும் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவதற்கு என்னால் முடிந்தவரை உழைப்பேன்" எனக் கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications