ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.. விஜயை வைத்து காங்கிரஸ் போடும் கணக்கு! ராகுல் வந்தவுடன் இருக்கு கச்சேரி!
சென்னை: கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்க்கு கூட்டணி வாய்ப்புகள் வரிசை கட்டி வருகின்றன. அதிமுகவும் பாஜகவும் விஜய்யை கூட்டணிக்கு இழுக்க முயற்சித்து வருகின்றன. இந்த நிலையில் சில பாசிடிவ் விஷயங்களை தமிழக காங்கிரஸ் கட்சியினர் டெல்லி தலைமைக்கு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு இருக்கும் நிலையில் பிரியங்கா காந்தியிடம் சில விஷயங்களை எடுத்து வைத்ததாக சொல்லப்படுகிறது. அண்ணன் வந்த பிறகு பேசுவதாக பிரியங்கா காந்தியும் உறுதியளித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கரூர் சம்பவத்தில் அரசியல் செய்யக்கூடாது என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வந்தாலும், அதனையும் சில கட்சிகள் அரசியல் ஆக்கித்தான் வருகின்றன. கரூர் சம்பவத்தைப் பொருத்தவரை விஜய் ஆதரவு விஜய் எதிர்ப்புதான் பிரதானமாக இருக்கிறது.
திமுக அரசை விமர்சிப்பதன் மூலம் அக்கட்சிக்கு நெருக்கடி கொடுக்கலாம் என சில கட்சிகள் விரும்புகின்றன. விஜய்க்கு ஆதரவு கொடுத்தால் வரும் தேர்தலில் அவருடன் கூட்டணி அமைக்கலாம் என சில கட்சிகள் விரும்புகின்றன.

கரூர் நிகழ்வு
இதை ஒட்டியே கடந்த இரு வாரங்களாக அரசியல் களத்தில் பேச்சு வார்த்தைகள் சென்று கொண்டிருக்கின்றன. விஜய்க்கு சட்டரீதியாக நெருக்கடி அதிகரித்திருக்கும் நிலையில் பாஜகவும் அதிமுகவும் ஆதரவு கரம் நீட்டி வருகின்றன. அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என விஜய் நினைத்தாலும் கொள்கை எதிரி என விமர்சித்த பாஜகவுடன் எப்படி கூட்டணி அமைப்பது என்பதுதான் விஜய் தரப்பின் யோசனையாக இருக்கிறது. அதே நேரத்தில் அதிமுகவுடன் தான் கூட்டணி பாஜகவுடன் இல்லை என கூறி சமாளித்து விடலாம் என சில தலைவர்கள் விஜயிடம் சொன்னதாகவும் சொல்லப்படுகிறது.
விஜய் கூட்டணி
ஆனால் விஜய் சற்றே யோசித்து வருவதால் பாஜகவும் தனது முடிவிலிருந்து பின் வாங்கலாம் என சொல்லப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாமா என விஜய் யோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. எப்படியாவது இந்த விவகாரத்தில் இருந்து வெளியே வர வேண்டும் என பல கட்சித் தலைவர்களை தொடர்பு கொண்டு பேசி வருகிறார். அப்படித்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடனும் பேசினார்.
காங்கிரஸ்
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு கமிட்டி தலைவர்கள் விஜயுடன் கூட்டணி அமைக்கலாம் என ஒரு சில தலைவர்கள் கோஷ்டியாக செயல்பட்டு வருகின்றனர். தற்போதைய தலைவர் செல்வப்பெருந்தகை திமுகவுடன் நெருக்கம் காட்டி வரும் நிலையில் முன்னாள் தலைவர்கள் சிலர் தேசிய தலைமையை தொடர்பு கொண்டு விஜய் குறித்து பேசி வருகிறார்களாம். குறைந்தபட்சம் 60 சட்டமன்றத் தொகுதிகள், துணை முதலமைச்சர், அமைச்சரவையில் இடம் என விஜய் தொடர்ந்து பேசி வருகிறார்.
60 தொகுதிகள் கோரிக்கை
திமுக கூட்டணியில் இருந்தால் குறைந்த சீட்டுகள்தான் கிடைக்கும் ஆட்சி அதிகாரத்திலும் பங்கு கிடைக்காது. விஜய்யுடன் கூட்டணி வைத்து தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் நிறைய பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். விஜய்யின் பிரபலம் அவர்களை மக்களிடம் கொண்டு செல்லும். இதனால் தமிழகத்தில் காங்கிரஸ் வலுவடையும் என பல்வேறு சாத்தியக்கூறுகளை சொல்லி இருக்கின்றனர்.மேலும், ஆந்திரா கர்நாடகாவிலும் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் குறிப்பாக கேரளாவில் விஜய் ஆதரவோடு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கலாம் என டெல்லி தலைமைக்கு கூறியுள்ளனர்.
பிரியங்கா - ராகுல் காந்தி முடிவு
ராகுல் காந்தி டெல்லி சென்றிருக்கும் நிலையில் அவரது சகோதரியும் காங்கிரஸின் அடுத்தகட்ட தலைவர் ஆன பிரியங்கா காந்தியிடம் இது குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது. தனது டீம் மூலம் சில சாதக பாதகங்களை ஆராய்ந்த பிரியங்கா காந்தியும் ஒரு வகையில் இந்த முடிவும் சரிதான் அதே நேரத்தில் சோனியா காந்தி மற்றும் வெளிநாடு சென்றிருக்கும் ராகுல் காந்தி வந்த பிறகு பேசலாம் என சொல்லி இருக்கிறார். அக்டோபர் 10ஆம் தேதி ராகுல் காந்தி இந்தியா வந்த பிறகு பல அதிரடி முடிவுகள் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications