மேயர் பிரியா + சிஎம்டிஏ.. சேகர் பாபுவிற்கு கிடைத்த மெகா வெற்றி.. பவரை அள்ளிக்கொடுத்த ஸ்டாலின்.. ஏன்?
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வசம் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும துறை அளிக்கப்பட்டு உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக சேகர் பாபு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு அமைச்சரவையில் இருக்கும் டாப் அமைச்சர்களில் ஒருவராக சேகர் பாபு இருக்கிறார். இந்த துறையில் இவரின் பணிகள் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. முக்கியமாக கோவில்களை சீரமைத்தது, பல்வேறு கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்தது என்று இவரின் செயல்கள் பாராட்டப்பட்டன.
உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ இன்று தமிழ்நாடு அமைச்சராக பதவி ஏற்று உள்ளார். இவருக்கு விளையாட்டு, இளைஞர் நலன் ஆகிய துறைகள் இன்று அளிக்கப்பட்டுள்ளது. உதயநிதி மட்டுமின்றி பல சீனியர் அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்டு உள்ளன. மூத்த அமைச்சர்கள் சிலருக்கு கூடுதலாக இலாக்காக்கள் கொடுக்கப்பட உள்ளன. இந்த நிலையில் சேகர் பாபுவிடம் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும துறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையுடன் கூடுதலாக அவர் இந்த துறையையும் கவனித்துக் கொள்வார்.

மேயர் பிரியா
முன்னதாக சென்னை மேயர் பொறுப்பிலும் சேகர் பாபுவிற்கு நெருக்கமான மேயர் பிரியா ஆர் தான் வென்றார். சென்னையில் வென்ற 153 பேரில் ஆண்கள் தவிர்த்து மீதம் உள்ள பெண்களில் தலித் பிரிவினரை மட்டும் கணக்கில் கொண்டால் 13 பேர் இருக்கிறார்கள். இந்த 13 பேரில் ஒரு பெண்ணுக்குத்தான் மேயர் பதவி கிடைக்கும். இதனால் இந்த பதவியை பெற பலரிடையே போட்டி நிலவியது. முக்கியமாக அமைச்சர் மா. சுப்பிரமணியம் மற்றும் அமைச்சர் சேகர் பாபு ஆதவாளர்கள் இடையே போட்டி நிலவியது. இந்த நிலையில், சென்னையின் மேயராக சென்னை திருவிக நகர் 74வது வார்டு உறுப்பினர் பிரியா ராஜன் தேர்வு செய்யப்பட்டார்.

யார் இவர்?
வட சென்னையின் திரு.வி.க. நகர் தொகுதிக்குள் அடங்கிய 74-வது வார்டில் இருந்து ப்ரியா கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமைச்சர் சேகர்பாபுவிற்கு இவர் நெருக்கம் ஆனவர். அவர் மாவட்ட செயலராக உள்ள சென்னை கிழக்கு மாவட்டத்தில் இருந்து இவர் வெற்றி பெற்றுள்ளார். இந்த மேயர் ரேஸில் கிளியர் வின்னர் என்னவோ அமைச்சர் சேகர் பாபுதான். சென்னையில் அமைச்சர் சேகர் பாபு மீது முதல்வர் ஸ்டாலினுக்கு இருக்கும் நம்பிக்கையை பறைசாற்றும் விதமாக மேயராக பிரியா தேர்வானார்.

சிஎம்டிஏ
இந்த நிலையில்தான்தான் தற்போது சிஎம்டிஏ இலாக்காவும் சேகர் பாபுவிற்கு கொடுக்கப்பட்டு உள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம்தான் சிஎம்டிஏ. சென்னையில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் இந்த துறைக்கு கீழ்தான் வருகிறது. சென்னையில் கொண்டு வரப்படும் புதிய ப்ராஜக்ட்டுகள், ஒப்பந்தங்கள் அனைத்திலும் இந்த துறைதான் முடிவு எடுக்கிறது. சென்னை பெருநகரத்திற்கு என்று தனியாக இருக்கும் துறையாகும். இதற்குத்தான் சேகர் பாபு அமைச்சராகி உள்ளார்.

சேகர் பாபு
சென்னை மேயராக ஏற்கனவே சேகர் பாபுவிற்கு நெருக்கமான பிரியா இருக்கிறார். தற்போது சென்னை பெருநகர வளர்ச்சி ஆணைய அமைச்சகராகி உள்ளார் சேகர் பாபு. இதன் மூலம் சென்னையில் இரண்டு முக்கிய பதவிகளை சேகர் பாபு தரப்பு கைப்பற்றி உள்ளது. மேயர் பிரியாவிற்கு இனி சென்னை தொடர்பான திட்டங்கள் பற்றி அமைச்சரிடம் பேசவும், முடிவுகளை எடுக்கவும் வசதியாக இருக்கும். முதல்வர் ஸ்டாலினும் இதை மனதில் வைத்தே இந்த முடிவை எடுத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது . அமைச்சர் மா. சுப்பிரமணியம் - சேகர் பாபு இடையே போட்டி நிலவி வரும் நிலையில்தான்.. சேகர் பாபுவிற்கு இந்த பொறுப்பு கிடைத்து இருக்கிறது. இதன் மூலம் சென்னையில் சேகர் பாபு மிக முக்கியமான தலைவராக உருவெடுத்து உள்ளார்.












Click it and Unblock the Notifications