“பண்பாட்டு படையெடுப்பு ஆரம்பம்?” முதல்வர் விஜய் வந்து பார்த்துவிட்டு போனதுமே வீரமணி எழுப்பிய கேள்வி
சென்னை: முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு பெரியார் திடலுக்குச் சென்ற முதல்வர் ஜோசப் விஜய், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியைச் சந்தித்தார். இந்நிலையில், முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவில் பண்பாட்டுப் படையெடுப்பின் தொடக்கமா? எனக் கேள்வி எழுப்பி காட்டமான அறிக்கை விட்டுள்ளார் கி.வீரமணி.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று காலை பதவியேற்றார். தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதனைத்தொடர்ந்து தலைமை செயலகம் வந்த முதலமைச்சர் விஜய் முறையாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பெரியார் திடலில் விஜய்
இதையடுத்து முதலமைச்சர் விஜய் சென்னை எழும்பூர் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்குச் சென்றார். அவர் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணியை சந்தித்தார். பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி பூங்கொடுத்து கொடுத்தார் முதல்வர் விஜய். பதிலுக்கு கி.வீரமணியும் முதலமைச்சர் விஜய்க்கும் பொன்னாடை போர்த்தி புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கினார். இதனை தொடர்ந்து சிறிது நேரம், கி.வீரமணியுடன் முதலமைச்சர் விஜய் கலந்துரையாடினார்.
தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை
முன்னதாக முதலமைச்சர் விஜய் பதவியேற்பு விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடலும், இரண்டாவதாக தேசிய கீதமும் பாடப்பட்டது. மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவி ஏற்றார். பொதுவாக தமிழ்நாடு அரசு விழாக்களில் கடைப்பிடிக்கப்படும் வழக்கமான மரபு மாற்றப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதலமைச்சர் ஜோசப் விஜய் பதவியேற்பு விழாவில், இதற்கு முன் எப்போதும் நடந்திராத ''திடீர் மாற்றம்'' - விழாவின் தொடக்கத்திலேயே நடைபெற்றதோடு, விழா முடிவிலும் அதைக் காண முடிந்தது. தமிழ்நாட்டின்மீது மீண்டும் இந்தி, சமஸ்கிருத ஆர்.எஸ்.எஸ். கொள்கைப் பண்பாட்டின் ஆதிக்கம் தொடங்கி உள்ளது.
கி.வீரமணி கேள்வி
தமிழ்நாட்டின் புதிய அரசுக்கு, குறிப்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு சுட்டிக்காட்டி (அதுவும் பதவியேற்ற அன்றே) நமது கண்டனத்தைப் பதிவு செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
'வந்தே மாதரம்' பாடல் சமஸ்கிருத, iந்தி மொழிப் படையெடுப்பின் படையெடுப்பு ஆகும். (சமஸ்கிருத மயப்படுத்தப்பட்ட பாட்டு) அதைவிட, 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப்போல', நம் மொழி செம்மொழித் தமிழ் வாழ்த்தாம் ''நீராரும் கடலுடுத்த'' பாடல் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதைப் பார்த்து, தமிழ் உணர்வாளர்களின் நெஞ்சம் கொதிக்கிறது! இதுபோன்ற அவலங்கள் மீண்டும் தொடராது இருக்க வழிவகை காணவேண்டும்!
''மரபுகள் மாற்றப்பட்டதுதானா இவர்களால் சொல்லப்பட்ட மாற்றம்?'' என்ற கேள்வி, தமிழ்நாடெங்கும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. இது எப்படி? ஏன்? ஏற்பட்டது என்பதை முதலமைச்சர் ஓர் அவசர விசாரணை நடத்தி, அதுபோன்ற அவலங்கள் மீண்டும் தொடராது இருக்க வழிவகை காணவேண்டும்!
கவனச்சிதறல் இன்றி செயல்படவேண்டும்
விழா ஏற்பாட்டாளர்கள் யார்? 'லோக் பவன்' என்ற ஆளுநர் மாளிகையா? அல்லது தமிழ்நாடு அரசின் பொதுத் துறையா? (Public Department?) என்பதை விசாரித்து, நேரிடையாகவோ, மறைமுகமாகவோ தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிரான இத்தகைய பண்பாட்டு படையெடுப்பு மீண்டும் அரசு நிகழ்ச்சிகளில் ஏற்படாது - கவனச்சிதறல் இன்றி செயல்படவேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications