பிராமணர் அல்லாதார் பதவிகளுக்கு வந்தால் லஞ்சம் வாங்குவார்களாம்.. கடுப்பேற்றிய கஸ்தூரி பேச்சு
சென்னை: தமிழ்நாட்டில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கடும் எதிர்ப்புகளை எதிர்கொண்டு விளக்கம் அளித்திருந்தார் நடிகை கஸ்தூரி. இதனைத் தொடர்ந்து டிவி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகை கஸ்தூரி, திறமை அடிப்படையில் (பிராமணர் அல்லாதார்) பதவிகளுக்கு வந்ததால் லஞ்சம் வாங்குகின்றனர் என்ற தொனியில் பேசிய கருத்தும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற நடிகை கஸ்தூரி பேசியதாவது: இத்தனை வருஷமா, செல்வத்தை சேர்க்க வேண்டும்; அரசு வேலையில் உட்கார்ந்துட்டா, திறமையில் வந்துட்டா, உடனே நல்லா சம்பாதிக்கனும்; லஞ்சம் வாங்கனும்; நேர்மையை காற்றில் பறக்கவிட்டுட்டு இன்னிக்கு மாதிரி எந்த இடத்தில் கேட்டாலும்... என பேசினார்.

அப்போது நெறியாளர் கார்த்திகேயன் குறுக்கிட்டு, இது ரொம்ப தவறான புரிதல் பிராமணர் சமூகத்தைச் சேராத மற்ற யாரும் அரசு வேலைக்கு போனால் யாரும் நியாயமாக இருக்கமாட்டாங்க.. லஞ்சம் வாங்குவாங்க என்கிற பொதுப் புத்தியில் பேசாதீங்க என நடிகை கஸ்தூரியை கண்டித்தார். ரொம்ப தவறான வாதம் கஸ்தூரி என்றார். அப்போது குறுக்கிட்ட கஸ்தூரி மீண்டும் பேச முயற்சித்தார். அப்போதும் நெறியாளர் கார்த்திகேயன், இல்லைங்க.. நீங்க பேசிய தொனி அதுதான்.. கன்டிக்கத்தக்கது; நீங்க பேசிய தொனி தப்பு என்கிற போது நான் எப்படி அனுமதிக்க முடியும்? நீங்க பேசியது தவறு. அப்படி ஒரு பிம்பத்தை ஏற்படுத்தாதீங்க என கடுமையாகவே கஸ்தூரியை பேசவிடாமல் தடுத்தார்.
இதனையடுத்து விவாத நிகழ்ச்சியில் இருந்து நடிகை கஸ்தூரி வெளியேறினார். பின்னர் கஸ்தூரி வெளியேறியதைக் குறிப்பிட்ட நெறியாளர் கார்த்திகேயன், இரவு 9.30 மணிக்கு விமானத்தை பிடிக்க வேண்டும் என ஏற்கனவே சொல்லி இருந்தார். அதனால் அவர் புறப்பட்டுச் சென்றார் என விளக்கம் தந்தார்.
பார்ப்பனரல்லாத மக்கள் அரசு வேலைக்கு வந்த பிறகு ஊழல் அதிகமாகிவிட்டது என்ற தொனியில் பேசுவது தான் பார்ப்பனியம்.
— S.M.Mathivadhani (@MMathivadhani) November 4, 2024
பார்ப்பனியம் எங்க இருக்கு என்று கேட்பவர்களுக்கான பதில்! pic.twitter.com/jfZZsRzjSF
முன்னதாக ஞாயிற்றுக்கிழமையன்று சென்னையில் நடைபெற்ற பிராமணர்கள் பாதுகாப்பு கோரும் ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி, தமிழ்நாட்டிலும் காஷ்மீர் போல இனப்படுகொலை நடைபெறுகிறது; 60 ஆண்டுகளுக்கும் மேலாக இது நடந்து கொண்டிருக்கிறது; மன்னர் கூடசேர்த்த அந்தப்புர பெண்களுக்கு சேவை செய்ய தெலுங்கு மொழி பேசும் மக்கள் தமிழ்நாட்டுக்கு வந்தனர் என்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், மிக நீண்ட விளக்கத்தையும் கஸ்தூரி கொடுத்திருந்தார். அப்போது, ஆந்திரா அரசியலில் நான் குதிக்கப் போகிறேன் என்றும் நடிகை கஸ்தூரி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications