ஏதோ பெருசா நடக்க போகுது.. செங்கோட்டையன் போன மறுநாளே.. டெல்லிக்கு விரையும் நயினார் நாகேந்திரன்
சென்னை: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவசரமாக டெல்லிக்கு புறப்படுவதாக தகவல்கள் வருகின்றன.
அதிமுகவில் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்கிறேன் என செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில் அமித் ஷா வீட்டுக்கு அவர் சென்றிருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. அவரது ஆதரவாளர்களின் பதவிகளையும் பறித்தார் ஈபிஎஸ். இந்நிலையில் செங்கோட்டையன் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவசரமாக டெல்லிக்கு புறப்படுவதாக தகவல்கள் வருகின்றன.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
நேற்று தமிழகத்தில் சந்திர கிரகணம் போல் ஆட்சி மாற்றம் விரைவில் நிகழும் என்றும், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்துவதற்கு அதிமுக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய டிடிவி தினகரனின் குற்றச்சாட்டுகளுக்கு தனது பாணியில் பதிலளித்த அவர், பல்வேறு அரசியல் கேள்விகளுக்கும் விளக்கம் அளித்தார்.
திருநெல்வேலி பாளையங்கோட்டை அன்பு நகரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். பேட்டியின்போது அவர், "தமிழகத்தில் நிறைய கிரகணங்கள் நடைபெற்று வருகிறது. ஆட்சி மாற்றம் வேண்டும், கிரகணம் விரைவில் நடைபெறும். அகில இந்தியத் தலைமை என்ன கூறுகிறதோ, அதைத்தான் நான் கேட்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அதிமுக கட்சியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதைத் தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இது தொடர்பாகப் பல தலைவர்களிடம் நான் பேசியுள்ளேன். தமிழகத்தில் திமுக ஆட்சி மீண்டும் வந்துவிடக்கூடாது. திமுகவுக்கு மாற்றான அரசு அமைய வேண்டும். இதற்காக அதிமுக கட்சி அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
திமுகவுக்கு மாற்றான ஆட்சி அமைய வேண்டும்
மேலும், "டெல்லி தலைமையோடு பேசி அனைவரையும் ஒன்றிணைக்க ஒரு முடிவு எடுக்கப்படும். தோல்வியே பிறருக்குக் கொடுத்து வளர்ந்தவர்கள் நாங்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் போல. அதுபோல வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்குத் தோல்வியைத் வழங்குவோம்" என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
டிடிவி தினகரன் குற்றச்சாட்டுகளுக்குப் பதில்:
நேற்று சந்திர கிரகணம் நிகழ்ந்ததைக் குறிப்பிட்ட நயினார் நாகேந்திரன், "அதேபோல தமிழக அரசியலிலும் நிறைய கிரகணங்கள் நடந்து கொண்டிருக்கிறது" என்றார். 2001-ல் நடந்த தேர்தலில் என் போன்றவர்கள் மேலே வந்ததில் டிடிவி தினகரனுக்கு முக்கிய பங்கு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகியதற்குக் காரணம் நயினார் நாகேந்திரன் தான் என்றும், அவர் அகங்காரத்துடன் செயல்படுகிறார் என்றும் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அவர், "2019 நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணா திமுக - பாஜக ஒரு கூட்டணியாக இருந்தது. இப்பொழுது டிடிவி தினகரன் கூட்டணியில் இல்லை. பல்வேறு அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு தனிக்கட்சி ஆரம்பித்தார். 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அண்ணா திமுகவோடு பாரதிய ஜனதா கட்சி கூட்டணியோடு இருந்து 65 இடங்களில் போட்டியிட்டு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றோம். பாட்டாளி மக்கள் கட்சியும் சில சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றார்கள். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது. தொடர்ந்து எங்களோடு இருப்பார்கள் என்று பலமுறை கூறியிருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
மேலும், "பலமுறை டிடிவி தினகரனோடு தொலைபேசியில் பேசியிருக்கிறேன். அப்பொழுது எல்லாம் கூட்டணி தொடர்பாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் திடீரென்று நயினார் தான் காரணம் என்று கூறுகிறார். நயினார் நாகேந்திரன் செயல்பாடுகளால் தான் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி உள்ளோம், நயினார் நாகேந்திரன் அகங்காரத்தில் செயல்படுகிறார் என்று எதன் அடிப்படையில் கூறுகிறார் என்பது எனக்குத் தெரியவில்லை, எனக்கு விளங்கவில்லை. திருநெல்வேலி பாஷையில் கூற வேண்டும் என்றால், எனக்கு விளங்கல" என்று கூறி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
முதல்வரின் வெளிநாட்டுப் பயணம், கொளத்தூர் விவகாரம்:
முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்துப் பேசிய நயினார் நாகேந்திரன், "இந்திய நாட்டிற்கும் லண்டனுக்கும் நமது முதலமைச்சர் நேரடியாகச் சென்று நட்புறவை ஏற்படுத்தினாரா? முதலமைச்சர் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக, முதலீடு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இதுவரை அதற்கான பதில் இல்லை" என்று கேள்வி எழுப்பினார்.
கொளத்தூர் தொகுதியில் 9000 ஓட்டுகள் திருட்டு நடைபெற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அது தொடர்பாகத் தாங்கள் ஆய்வு செய்ய உள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தாமிரபரணி, பசும்பொன் தேவர்:
தாமிரபரணி நதியைப் பொருத்தவரை அது மாநில அரசின் கடமை என்றும், உயர் நீதிமன்றமும் அதனை அறிவிக்கியுள்ளது என்றும் அவர் கூறினார். பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், "சுதந்திரப் போராட்டத்திற்காகப் போராடிய நபர். வாய் போட்டுச் சட்டம் போட்டது அவருக்குத் தான். சுதந்திரப் போராட்ட தியாகிகள் அனைவரும் தற்போது ஜாதி தலைவராக ஆகிவிட்டார்கள். இப்போது அந்த சர்ச்சை வேண்டாம்" என்று தெரிவித்தார்.
பாஜகவின் வெற்றி நிச்சயம்:
பாஜக கூட்டணியில் இருந்த டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து விலகிய நிலையில், தேமுதிக, பாமக மௌனம் காக்கும் சூழலில் வலிமையான திமுகவை எதிர்த்துத் தோல்வி எண்ணத்துடன் தேர்தலை எதிர்கொள்கிறதா பாஜக என்ற கேள்விக்கு, "வெற்றி நிச்சயம் என்றே எதிர்கொள்கிறோம். எம்ஜிஆர் கூறியது போல் மற்றவர்களுக்குத் தோல்வியைப் பரிசளித்தே பழகியவர்கள் பாஜகவினர்" என்று நயினார் நாகேந்திரன் உறுதியாகப் பதிலளித்தார்.
செங்கோட்டையன் பாஜகவில் சேர்வது குறித்து:
அதிமுகவில் நீக்கப்பட்ட செங்கோட்டையன், பாஜகவிற்கு வர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, "ஒரு கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் போது செங்கோட்டையனை அழைப்பது நாகரீகமாக இருக்காது" என்று அவர் பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications