மோதல் முடிவுக்கு வருமா? ராமதாசுடன் அன்புமணி சமரச பேச்சுவார்த்தை.. பரபரக்கும் தைலாபுரம்
சென்னை: புதுவையில் நேற்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு உருவானது. பாமக இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமனம் செய்வது தொடர்பாக தந்தை மகன் இருவருக்கும் கருத்து வேறுபாடு உருவானது. இந்த நிலையில் இன்று விழுப்புரம் தைலாபுரத்தில் ராமதாசை அன்புமணி சந்தித்து பேசி வருகிறார். அரைமணி நேரத்துக்கும் மேலாக இந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
பாமக பொதுக்குழு மேடையிலேயே கட்சியில் நான் சொல்வதை மட்டும் தான் கேட்க வேண்டும் இல்லையெனில் வெளியேறலாம் என்று ராமதாசும், பனையூரில் அலுவலகம் திறக்கிறேன் என்னை சந்திக்க விருப்பம் உள்ளவர்கள் அங்கு வரலாம் என்று அன்புமணியும் பேசியது பாமக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் இந்த பேச்சுவார்த்தையின் மூலம் இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு முடிவுக்கு வரும் என்று பாமகவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

புதுவையில் நேற்று பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜிகே மணி உள்பட கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்று இருந்தனர். இந்தக் கூட்டம் முடியும் போது பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், கட்சியில் காலியாக உள்ள இளைஞர் அணி தலைவர் பதவிக்கு, முகுந்தன் என்பவரை அறிவித்தார். இவர் ராமதாசின் மகள் வழி பேரன் ஆவார். முகுந்தனை முன் மொழிந்து ராமதாஸ் பேசிக்கொண்டு இருக்கும் போதே குறுக்கிட்ட அன்புமணி, முகுந்தனை நியமிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கட்சியில் சேர்ந்தே 4 மாதம்தான் ஆகிறது. அவர் போன் செய்தால்கூட எடுக்க மாட்டார். அதற்கு பதில் கட்சியில் நீண்ட காலமாக இருப்பவர்களுக்கு பதவி கொடுக்கலாம் எனக் கூறினார்.
கருத்து வேறுபாடு
இதைக் கேட்ட ராமதாஸ், ''இது நான் ஆரம்பித்த கட்சி. நான் சொல்வதைத்தான் கேட்கணும், கேட்காவிட்டால் யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது. இல்லாவிட்டால் போங்கள். மீண்டும் சொல்கிறேன். மாநில இளைஞர் சங்க தலைவராக முகுந்தன் நியமிக்கப்படுகிறார். அவர் தலைவருக்கு உதவியாக இருப்பார். இதை யாராலும் மாற்ற முடியாது. விருப்பம் இல்லாவிட்டால் செல்லலாம். இங்கு நான் சொல்வதைத்தான் கேட்கணும்'' எனக் கூறினார்.
இதையடுத்து பேசிய அன்புமணி, "பனையூரில் தனக்கு அலுவலகம் இருப்பதாகவும் அங்கு வந்து தன்னை சந்திக்கலாம்" எனவும் கூறினார். பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் - அன்புமணி இடையே வெடித்த கருத்து வேறுபாடு பாமகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அன்புமணி ராமதாஸ் வாழ்க... வாழ்க எனவும் தொண்டர்கள் கோஷம் எழுப்பினர்.
ராமதாசை சந்திக்கிறார் அன்புமணி
பாமகவில் தந்தை - மகன் இடையே ஏற்பட்ட இந்த மோதல் நேற்று அரசியல் வட்டாரத்திலும் பேசு பொருளானது. இத்தகைய பரபரப்புக்கு இடையே, பாமக நிறுவனர் ராமதாசை அன்புமணி ராமதாஸ் சந்திக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தைலாபுரத்தில் உள்ள தோட்டத்தில் இன்று காலை 11 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
இந்த நிலையில் இன்று 12.00 மணியளவில் அன்புமணி விழுப்புரம் தைலாபுரத்துக்கு வருகை தந்தார். தொடர்ந்து ராமதாசுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். ராமதாஸ் அன்புமணி இருவரும் அரை மணி நேரமாக பேசி வருகிறார்கள். இந்த் சந்திப்பின் போது ஜிகே மணி உள்ளிட பலரும் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு நேற்று ஏற்பட்ட சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் சந்திப்புக்கு பிறகு இருவரும் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த சந்திப்புக்கு பிறகு ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு முடிவுக்கு வரும் என்று பாமகவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications