ரெட் அலர்ட், கஜா, கனமழை .. 20 தொகுதிகளின் தேர்தலும் தள்ளி போகுமா?
Recommended Video

சென்னை: ரெட் அலர்ட், கஜா புயல் ஆகியவற்றால் 20 தொகுதிகளின் தேர்தலும் தள்ளி போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொதுத் தேர்தலும் ,சட்டசபை தேர்தலும் ஒன்றாக நடத்தப்பட வேண்டும் என ஒரு சாராரும், அவை தனித்தனியாக நடத்தப்பட வேண்டும் என மறு சாராரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளின் எம்எல்ஏக்களாக இருந்த கருணாநிதி, ஏ.கே. போஸ் ஆகியோர் காலமாகிவிட்டனர்.
இதனால் இந்த இரு தொகுதிகளும் காலியாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இடைத்தேர்தல்கள் நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
[தீவிரமடையும் கஜா புயல்.. அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாக மாறும்!]

தேர்தல் ஆணையம்
இதனிடையே கடந்த அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி தமிழகத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இதையடுத்து ரெட் அலர்ட் விடுக்கும் அளவுக்கு மழை இருக்கும் என்பதால் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பை ஒத்தி வைக்குமாறு தமிழக அரசு, தமிழக தலைமை தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக் கொண்டது.

அறிவிப்பு இல்லை
அதன்படி மழை, வெள்ளத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இடைத்தேர்தல் தற்போது அறிவிக்கப்படவில்லை என தமிழக தேர்தல் ஆணையமே வெளிப்படையாக கூறியது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

எந்த நேரத்திலும்
இந்நிலையில் தகுதி நீக்க வழக்கில் 18 எம்எல்ஏக்களின் பதவிகளும் பறிக்கப்பட்டது சரியே என சென்னை உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணா தீர்ப்பளித்தார். மேலும் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தவிருந்த தடையை நீக்கினார். இதனால் இந்த 18 தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் தொகுதிகள், 2 தொகுதிகள் என 20 தொகுதிகளுக்கும் தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

தேர்தல் நடத்தப்படுமா
தற்போது வங்க கடலில் கஜா புயல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வரும் 15, 16 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த முறை ரெட் அலர்ட், கஜா புயலை காரணம் காட்டி இடைத்தேர்தல் தள்ளி போடப்படுமா, இல்லை பொதுத் தேர்தலுடன் சேர்த்து இந்த தேர்தலும் நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications