மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி.. பல தடைகளை தாண்டி சாதனை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி, ஓடினால் தடுப்பு சுவர்கள்.. ஒரு பக்கம் மத்திய அரசு, மறுபக்கம் ஆளுநர், நிதி நெருக்கடி என பல தடைகளை தாண்டி சாதனை படைத்து வருவதாகவும், இது ஒரு கட்சியின் அரசல்ல ஒரு கொள்கையின் அரசு என செயல்பட்டு வருவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில் தமிழ்நாடு அரசு படைத்த சாதனைகளை விளக்கிப் பேசிய அவர், காவல்துறையின் கீழ் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய அவர்," மாநில சுயாட்சி கனவை நினைவாக்க குழு அமைக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சராக ஐந்தாவது ஆண்டாக அடியெடுத்து வைக்கும் இந்த வேளையில் இந்த மன்றத்தில் உறுதியோடு சொல்கிறேன். எனது பயணம் தமிழ்நாடு தமிழர்கள் மாநில உரிமைக்காக தொடரும்.

ஸ்டாலின் என்றால் உழைப்பு உழைப்பு உழைப்பு என தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி என்னை கூறி இருந்தார். இப்போது இருந்திருந்தால் அதனை சாதனை எனக் கூறியிருப்பார். இதுவரை திராவிட மாடல் அரசின் முதல் பாகத்தை தான் பார்த்து இருக்கிறார்கள். 2026 இல் வெர்ஷன் 2.0 லோட் ஆகி கொண்டு இருக்கிறது. இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக, 9.6 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது தமிழ்நாடு. தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனையுடன் செயல்படும் ஒன்றிய அரசுதான் இதனை கூறி உள்ளது.
இதுவரை இல்லாத உச்சமாக 15 மில்லியன் டாலர் அளவுக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. இது சாதாரண சாதனை அல்ல கடும் உழைப்பால் விளைந்த சாதனை. இதுவரை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், செய்துள்ள சாதனைகளால் 7-வது முறையும் தி.மு.க.தான் ஆட்சி அமைக்கும். திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு அடைந்திருக்கிற உயரம் இந்தியாவே காணாதது. மேலே பாம்பு கீழே நரிகள் குதித்தால் அகழி ஓடினால் தடுப்பு சுவர் என்று ஒரு பக்கம் ஒன்றிய அரசு மறுபக்கம் ஆளுநர், நிதி என்று எல்லா தடைகளை தாண்டி சாதனை படைத்து வருகிறோம்.
கலைஞர் இருந்தால் என்ன செய்திருப்பாரோ அதனைதான் நான் செய்து வருகிறேன். கலைஞர் எண்ணங்கள் தான் இந்த அரசின் செயல்கள். கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு கட்டாந்தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. கல்வித்துறையில் கடந்த 4 ஆண்டுகளில் இடைநிற்றலே இல்லாத நிலை உள்ளது. உயர் கல்வியின் வளர்ச்சி தமிழ்நாட்டில் 47 சதவீதமாக உயர்ந்துள்ளது. நிதி ஆயோக் வெளியிட்ட வளர்ச்சி இலக்க குறியீட்டில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.
உயர்நிலைப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 47 சதவீதமாக அதிகரித்துள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் இடைநிற்றலே இல்லை என்ற நிலையை எட்டியுள்ளோம். இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழே 13.2% பேர் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் வெறும் 1.4 சதவீதம் தான் இருக்கிறது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தால் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள், மருத்துவ மாணவர் இடங்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறுபவர்களுக்கு நான் கூறுவது இது மணிப்பூரோ காஷ்மீரோ அல்ல தமிழ்நாடு என்பதை மறந்து விடாதீர்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications