அவியல் கூட்டு போல் வேளாண் பட்ஜெட்.. தவறு செய்ய வசதியான பட்ஜெட் இது.. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
சென்னை: அத்திக்கடவு அவினாசி திட்டத்தை போல் ஒரு திட்டத்தை திமுக கொண்டு வரவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வேளாண் பட்ஜெட் என்பது விவசாயிகளை ஏமாற்றுவதாக அமைந்துள்ளதாக விமர்சித்துள்ள எடப்பாடி பழனிசாமி, நிதி மேலாண்மை நிபுணர் குழு அமைத்த பின்னரே தமிழக அரசு அதிக கடன் வாங்கி இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
2025-26 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் பட்ஜெட் 2025 தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் உழவர்கள் நலன், விவசாய உற்பத்திகளை பெருக்குவது, விவசாயம் செய்யும் இளைஞர்கள் தொழில் முனைவோராக மாற்றுவது, உழவர் சந்தை உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் என்பது போலியானது. 5வது முறையாக வேளாண் பட்ஜெட்டை 1.30 மணி நேரமாக வாசித்துள்ளனர். வேளாண் பட்ஜெட்டை 1.30 மணி நேரம் வாசித்தது மட்டுமே திமுகவின் சாதனை. விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்டாக இது உள்ளது.
அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் நெல், கரும்பு உற்பத்தி குறைந்துவிட்டது. அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தான் பல உள்ளன. சாகுபடி பரப்பை 75 சதவிகிதமாக உயர்த்துவதாக கூறினார்கள். ஆனால் இதுவரை 37.7 சதவிகிதமாகவே உள்ளது. அத்திக்கடவு அவினாசி திட்டம் போல் ஒரு திட்டத்தை திமுக கொண்டு வரவில்லை. அத்திக்கடவு அவினாசியில் 2வது திட்டத்தை அதிமுக கொண்டு வந்தது.
அதனையும் இந்த அரசு கைவிட்டுள்ளது. கடன் பெற்றுதான் திட்டங்களை நிறைவேற்றும் நிலை உள்ளது. கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்பதுதான் திமுக அரசு செய்த சாதனையாகும். நிதி மேலாண்மையை சரி செய்ய அமைக்கப்பட்ட நிபுணர் குழு என்ன செய்தது? நிதி மேலாண்மை நிபுணர் குழு அறிவிக்கப்பட்ட பின்னர்தான் நிறைய கடன் வாங்கியுள்ளது. மழைநீரை சேமிக்கும் குடிமராமத்து திட்டத்தை திமுக அரசு கைவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு முழுமையாக கடனில் மூழ்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications