திருமாவுக்கு விடாமல் வலைவீசும் அதிமுக.. “வந்தா உங்களுக்கு லாபம்.. கூடுதல் சீட்”! ஆசை காட்டும் மாஜி!
சென்னை: அதிமுக கூட்டணிக்கு விசிகவுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுளது. வந்தால் அவர்களுக்குத்தான் லாபம், கூடுதல் சீட் கிடைக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதிமுக பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திமுகவை பொறுத்தவரை 4 கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கிவிட்டது. காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது.

அதிமுகவுக்கு பயந்து: திமுக கூட்டணியில் விசிக 1 பொதுத் தொகுதி உட்பட 3 சீட்களை கேட்டு வரும் நிலையில், திமுகவோ 2 சீட் தான் தர முடியும் என உறுதியாக நிற்கிறது. இதன் காரணமாக இழுபறி நீடித்து வருகிறது. இந்த கேப்பில், அதிமுக, விசிகவுக்கு தூது விட்டுப் பார்த்தது. அதிமுக கூட்டணிக்கு விசிக தலைவர் திருமாவளவன் வந்தால் வரவேற்போம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.
மேலும், "எங்களுக்கு பயந்தே திமுக தங்கள் கூட்டணியில் அவசர அவசரமாக தொகுதி பங்கீட்டை முடிக்கிறது. கூட்டணி கட்சிகளை விட்டால் நேராக அதிமுகவுக்கு வந்துவிடுவார்கள் என்பதால்தான் இந்த அவசரம். திருமாவளவனுக்கு விருப்பம் இல்லாமல்தான் திமுக அணியில் இருக்கிறார். கடைசி நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்" என்று கூறி இருந்தார்.
கதவை சாத்திய திருமா: ஆனால், இந்த பேச்சுக்கு சுளீரென பதில் கொடுத்தார் விசிக தலைவர் திருமாவளவன். விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் தான் இருக்கிறது. அதில் எந்தவித ஊசலாட்டமும் இல்லை. திமுக காங்கிரஸ் கூட்டணியில் ஏதேனும் இடைவெளி ஏற்படும் என நினைத்து அதில் நுழையலாம் என யாரும் காத்திருக்க வேண்டிய தேவையில்லை. திமுக கூட்டணியில் இடைவெளி வரும் என யாரும் இலவு காத்த கிளி போல் காத்திருக்க வேண்டாம். மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தான் விசிக போட்டியிடும். இதில் எந்த மாற்றமும் கிடையாது" என்று தெரிவித்தார்.
இதன் மூலம், அதிமுகவுக்கு படாரென விசிக கதவைச் சாத்தி இருந்தாலும், அதிமுக இன்னும் விடவில்லை. இன்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விசிகவுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் பேசியுள்ளார். இன்று சென்னையில் திமுக அரசைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஜெயக்குமார்.
வந்தால் அவர்களுக்கு லாபம்: அப்போது அதிமுக கூட்டணிக்கு விசிக வந்தால் ஏற்றுக்கொள்வது பற்றி பேசிய ஜெயக்குமார், "திமுக கூட்டணியில் இழுபறி உள்ளது. அதிமுகவை பொறுத்தவரை எங்கள் கூட்டணிக்கு வேறு ஏதேனும் கட்சிகள் வர விரும்பினால் வரலாம். வந்தால் வரவேற்போம். வரவில்லை என்றால் டோன்ட் கேர். வந்தால் அவர்களுக்கு தான் லாபம். அதிமுக கூட்டணிக்கு வந்தால் கூடுதல் இடம் கிடைக்கும். நாங்கள் யாரிடமும் கூட்டணிக்காக நிற்கவில்லை. திமுக கூட்டணியில் அதிருப்தி இருந்தால் அதிமுகவுக்கு வரலாம்." என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய ஜெயக்குமார், "பிரதமர் மோடி வருகையால் தமிழகத்தில் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை. இந்த மண் திராவிட மண். மோடியின் வருகையால் பாஜகவுக்கும் பலன் இருக்காது. தமிழக மக்களுக்கும் பலன் இருக்காது. வடக்கே இருக்கிற கட்சிகள் தமிழகத்தில் ஆட்சியமைக்க வாய்ப்பு கிடைக்காது. காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான வாக்குகள் இருந்தாலும் ஆட்சியமைக்க முடியாது. தமிழகம் அவர்களை ஏற்றுக்கொள்ளாது. யார் வந்தாலும் அது வீணான முயற்சிதான்." என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications