எடப்பாடியாருக்கு வந்த "அந்த" போன்.. மொத்த காட்சியும் மாறி போச்சு.. கூட்டணியும் வலுவாகி போச்சு!
சென்னை: 2 விஷயங்களுக்கு விடை கிடைத்துள்ளன.. ஒன்று, கே.பி. முனுசாமி, பாஜகவை பற்றி விமர்சிக்கவே இல்லையாம்.. இன்னொன்று, அதிமுக - பாஜக உறவில் இருந்த சிக்கல் நீங்கி, கூட்டணி வலுப்பெற்றுள்ளது.
கொஞ்ச நாட்களாகவே அதிமுக - பாஜக இடையே அதிருப்தி காணப்பட்டு வந்தது.. அமித்ஷா கூட்டணியை உறுதி செய்துவிட்டு சென்ற பின்னரும் இந்த நிலைமை நீடித்தது.
"வருகிற சட்டமன்றத் தேர்தலில் என்னுடைய பாஜக சகோதரன், என்னுடைய பாஜக சகோதரி சட்டமன்றத்தில் அமர்ந்தே தீருவார்.. பாஜகவின் காலம், வருகிற ஆட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி என்பதை நிர்ணயம் செய்வோம்" என்பதே எல்.முருகனின் ஒரே நிலைப்பாடாக இருந்தது.

எல்.முருகன்
எல்.முருகன் என்ன சொல்கிறாரோ, அதையேதான் வானதி சீனிவாசனும் சொல்லி வந்தார்.. ஆனால், இதற்கு அதிமுக தரப்பில் வழக்கம்போல பதில் அளிக்கும் அமைச்சர் ஜெயக்குமாரோ, இது முருகனின் சொந்த கருத்து, எடப்பாடியார்தான் முதல்வர் வேட்பாளர், அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்று கொள்பவர்களுடன்தான் எங்கள் கூட்டணி என்று ஒவ்வொரு பேட்டியிலும் சொல்லி கொண்டே இருந்தார்.

கருங்காலிகள்
இது எல்லாவற்றிற்கும் மேலாக, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி.முனுசாமி, சென்னை கூட்டத்தில் பேசும்போது, "சில கருங்காலிகள் திராவிட இயக்க ஆட்சியில் தமிழகத்தை சீரழித்துவிட்டதாக சொல்கிறார்கள். சில தேசிய கட்சிகள், சில சந்தர்ப்பவாதிகள், பெரியார் காலத்தில் இருந்து, திராவிட இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று அலையும் கூட்டம் அவ்வாறு சொல்கிறது. கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத காலத்தில் சிலர் உள்ளே நுழைந்துவிடலாம் என நினைக்கிறார்கள்.. தேசிய கட்சி, மாநில கட்சி என, எந்த கட்சி வந்தாலும், அதிமுக தலைமையில் தான் கூட்டணி. கூட்டணி ஆட்சி என்ற எண்ணத்தோடு, யாரும் வர வேண்டாம்" என்று தாக்கினார்.

முரண்கள்
முனுசாமி பேசுவது பாஜகவைதான் என்பது தமிழகம் அறிந்த ஒன்றுதான் என்றாலும், மேற்கண்ட இரு தரப்பினரின் முரண்கள் அத்தனையும் சுக்குநூறாக நொறுங்கிபோய்விட்டது. காரணம், முனுசாமி பேசியது பாஜகவின் தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.. உடனடியாக மேலிட பொறுப்பாளரான சிடி. ரவி, முதல்வருடன் போனில் பேசியிருக்கிறார்.. அவர் உத்தரவிட்டதை அடுத்தே, முருகன் கட்சி நிர்வாகிகளுடன் தலைமை செயலகம்சென்று முதல்வரை சந்தித்து பேசினார்.. பிறகு இரு தரப்பினருக்கும் சமரசம் ஏற்பட்டுள்ளது.

வலுவாக உள்ளது
இதற்கு பிறகு ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருந்த கட்சிகள், தற்போதும் தொடர்கின்றன. கேபி முனுசாமி, பாஜகவை குறிப்பிட்டு எதுவும் பேசவில்லை.பாஜக மாநில தலைவர்கள், கட்சியினரை உற்சாகப்படுத்த கருத்துக்கள் சொல்வதை எல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை" என்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகனும், "அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறது, வலிமையாக உள்ளது.. விரைவில் நல்ல பதில் கிடைக்கும்" என்றார். ஆக இரு தரப்பினரும் சுமூக முடிவுக்கு வந்துவிட்டனர்..

யாரை சொல்கிறார்?
இருந்தாலும் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது.. ஜெயகுமார் சொல்வது போல, கே.பி.முனுசாமி பாஜகவை குறிப்பிட்டு பேசவில்லை என்றால், வேறு எந்த கட்சியை அப்படி தாக்கி பேசியிருப்பார்? "சில தேசிய கட்சி, திராவிட கட்சிகளை அழிக்க நினைக்கிறது" என்று சொன்னது யாரை? தேசிய கட்சி என்றால் காங்கிரசும் அடக்கம்தான்.. ஆனால் அந்த கட்சியும் திராவிட கட்சியான திமுகவுடன்தான் கூட்டணியில் இருக்கிறது.. அப்படியென்றால் முனுசாமி சொன்னது யாரை? எதற்கு? என்பதுதான் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications