என்டிஏ கூட்டணியில் இணைகிறோம்.. எடப்பாடியுடன் நடப்பது பங்காளி சண்டைதான்.. டிடிவி தினகரன் அறிவிப்பு!
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணியில் அமமுக இணைகிறது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். எங்களுக்குள் நடப்பது பங்காளி சண்டைதான் என்று கூறிய டிடிவி தினகரன், விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
செப்டம்பர் மாதத்தில் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார். இதன்பின் டிடிவி தினகரன் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமியை துரோகி என்று விமர்சித்து வந்தார். இதன் காரணமாக தவெக தலைவர் விஜய்யுடன் அமமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.

அதற்கேற்ப விஜய்யை தொடர்ந்து பாராட்டி வந்தார். விஜய் தலைமையில் 3வது அணி அமைந்தால், அது மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்று பேசி வந்தார். ஆனால் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் தொடர்ச்சியாக டிடிவி தினகரன் சந்திப்பு நடத்தி வந்தார். இதனிடையே எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணத்தின் போது, அமித்ஷா தரப்பில் அமமுகவை கூட்டணிக்குள் கொண்டு வர பேசப்பட்டது.
அதற்கு எடப்பாடி பழனிசாமி கிட்டத்தட்ட ஒப்புதல் கொடுத்த நிலையில், உடனடியாக டிடிவி தினகரனும் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பின் போதே தொகுதி பங்கீடு தொடர்பாக பேசப்பட்டது. அப்போது அமமுக தரப்பில் இரட்டை இலக்கத்தில் தொகுதி பங்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.
அதேபோல் என்டிஏ கூட்டணியின் பொதுக்கூட்டம் ஜனவரி 23ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் சென்னையில் நடக்கவுள்ளது. அதற்கு முன்பாக என்டிஏ கூட்டணியை இறுதி செய்ய பியூஷ் கோயல் முடிவு செய்து பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சென்னையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளிடம் தனது முடிவை டிடிவி தினகரன் கூறி இருக்கிறார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து டிடிவி தினகரன் பேசுகையில், தமிழ்நாட்டில் நல்லாட்சி அமைய உறுதுணையாக இருப்போம். தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைக்கும் நோக்கில் என்டிஏ கூட்டணியில் அமமுக இணைகிறது.
எடப்பாடி பழனிசாமிக்கும் எங்களுக்கும் நடப்பது பங்காளி சண்டைதான். ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.. விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை. "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்" என்ற திருக்குறளையும் தெரிவித்தார். இதன்பின் தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை சந்திக்க புறப்படுவதாக டிடிவி தினகரன் சொல்லி சென்றார்.












Click it and Unblock the Notifications