கர்நாடகா: புலிகேசி நகர் தொகுதியில் பாஜகவை எதிர்த்து அதிமுக வேட்பாளர் அன்பரசன் போட்டி - இபிஎஸ் அதிரடி
சென்னை: கர்நாடகா சட்டசபை தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் பாஜகவை எதிர்த்து அதிமுக வேட்பாளராக அன்பரசன் போட்டியிடுவார் என அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் பாஜக போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. புலிகேசி நகர் தொகுதியில் பாஜகவின் முரளி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தற்போது பாஜக வேட்பாளரை எதிர்த்து அதிமுகவின் அன்பரசன் போட்டியிடுவார் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இடம்பெற்றுள்ளது. தமிழ்நாட்டிலும் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி தொடருகிறது என்பதுதான் பாஜக, அதிமுக தலைவர்களின் கருத்து. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பாஜக- அதிமுக கூட்டணி தொடருகிறது என கூறியிருந்தார். இதனை அதிமுக தலைவர்களும் ஆமோதித்து இருந்தனர்.
ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக தலைவர்களை விமர்சித்து வந்தார். அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள் ஊழல்களை வெளியிடுவோம் என கூறியிருந்தார். இதற்கு அதிமுக பதிலடி தந்தது. அதேநேரத்தில் அண்ணாமலையின் ஆதரவாளர்களான அமர்பிரசாத் ரெட்டி போன்ற பாஜக நிர்வாகிகள், கூட்டணி கட்சித் தலைவர் என்றும் பார்க்காமல் எடப்பாடி பழனிசாமியை இழிவாக விமர்சித்திருந்தனர்.

அதேநேரத்தில் கர்நாடகா தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிடுவதற்கான முயற்சிகளையும் அதிமுக மேற்கொண்டு வந்தது. ஆனால் பாஜக மேலிடமோ, அதிமுகவுக்கு எந்த வித சிக்னலும் தராமல் இருந்து வந்தது. இப்படியான அடுத்தடுத்த நிகழ்வுகள் அதிமுக தலைமையை ரொம்பவே கொந்தளிக்க வைத்தது.
இந்தப் பின்னணியில்தான் தற்போது திடீரென பாஜகவை எதிர்த்து கர்நாடக தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் கர்நாடகா மாநில அதிமுக அவைத் தலைவரான அன்பரசனையே வேட்பாளராகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பாஜக மீதான கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் கர்நாடகா சட்டசபை தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிடுகிறது.
கர்நாடகா தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்த கையோடு அடுத்த ஆட்டத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடங்கிவிட்டது. கர்நாடகாவில் நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் முடிவடைகிறது. இதனால் தம்மை அதிமுகவின் பொதுச்செயலாளராக இன்றே அங்கீகரித்து முடிவை அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு நெருக்கடி கொடுத்துள்ளது எடப்பாடி பழனிசாமி. ஏற்கனவே இது தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அவ்வழக்கில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க 10 நாட்களும் அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கர்நாடகா தேர்தலை முன்வைத்து மீண்டும் தேர்தல் ஆணையத்தை நாடி உள்ளது எடப்பாடி தரப்பு.












Click it and Unblock the Notifications