ரெண்டே ரெண்டு பாயிண்ட்.. அழுத்தமாய் சொன்ன அமித் ஷா! பிடி கொடுக்காத எடப்பாடி.. ‘ராஜமாதா’வுக்கு ஷாக்!
சென்னை: அதிமுக பாஜக தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுகள் தான் தமிழக அரசியலில் மிக முக்கிய பேசுபொருளாக மாறி இருக்கிறது. பாஜகவுடன் கூட்டணியே இல்லை என கூறிய அதிமுக தற்போது தேர்தல் வரும் போது பேசுவோம் எனக் கூறியிருப்பது கூட்டணியை கிட்டத்தட்ட உறுதி செய்ததாகவே கருதப்படுகிறது. இதற்கிடையே டெல்லி பயணத்திற்கு பிறகும் பாஜக தரப்பில் இரு முக்கிய கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் ஆனால் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. அதாவது அண்ணாமலை பாஜக தலைவராக தொடர்வார், கூட்டணியில் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை இணைத்துக் கொள்ள வேண்டும் என பாஜக தலைமை அறிவுறுத்தியதாம். ஆனால் இரண்டுக்குமே முடியவே முடியாது என எடப்பாடி பழனிச்சாமி மறுத்துவிட்டதாகவும், இல்லையென்றால் தனி அணி அமைத்து தேர்தலை சந்திக்க கூட தயார் என பதில் அளித்து இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக அரசியல் மீண்டும் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. மக்களவைத் தேர்தல் நிறைவடைந்து ஓராண்டு கடந்து விட்ட நிலையில் தற்போது அடுத்ததாக 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகள் தயாராகி வருகிறது.

திமுக கூட்டணியை பொறுத்தவரை ஏற்கனவே இருந்த கட்சிகளே 2026 சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் சில கட்சிகள் கூட்டணியில் தொடர்கின்றன.
அதிமுக கூட்டணி: அதிமுகவை பொறுத்தவரை சொல்லிக் கொள்ளும்படியான கட்சி என்றால் தற்போதைக்கு தேமுதிக தான். அதே நேரத்தில் மாநிலங்களவை சீட்டு தொடர்பாக அந்த கூட்டணியில் பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் அதிமுகவுடன் தான் 2026 தேர்தலை சந்திப்போம் என தேமுதிக கூறி இருப்பதையும் கவனிக்க வேண்டும். இந்த விவகாரங்கள் ஒருபுறம் இருக்க திடீரென கூட்டணி பேச்சு வார்த்தைகள் சூடு பிடித்திருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி: கடந்த சில இடங்களுக்கு முன்பு டெல்லி பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்து பேசினார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு, டாஸ்மாக் விவகாரம், மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தான் பேசியதாக எடப்பாடி பழனிச்சாமி கூறினாலும், அதிமுக கூட்டணி தொடர்பான முதற்கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், கேபி முனுசாமி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிச்சாமி அதற்கு பிறகு அமித்ஷாவுடன் தனியாக 50 நிமிடம் பேசியதாக கூறப்படுகிறது.
அமித் ஷா: ஆனால் கூட்டணி தொடர்பாக பேசவில்லை. தமிழ்நாடு மக்கள் பிரச்சனைகள் தொடர்பாகத் தான் பேசினேன் என எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்தார். ஆனால் சில நிமிடங்களில் 2026இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தது அதிமுக கூட்டணியை உறுதி செய்வது போலவே இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதற்கிடையே அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி பேசிய கருத்துக்கள் தொடர்பாக சில தகவல்கள் கசிந்தது.
அண்ணாமலை: அதன்படி அதிமுக தலைமையில் தான் கூட்டணி, முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ, சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரின் கூட்டணியில் சேர்க்கக் கூடாது என எடப்பாடி பழனிச்சாமி அமித் ஷாவிடம் வலியுறுத்தினாராம். குறிப்பாக தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை தொடரக் கூடாது என எடப்பாடி பழனிச்சாமி உறுதியாகவே சொன்னதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 2 நாட்களில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொண்டு அமித் ஷாவை சந்தித்து பேசினார்.
பாஜக - அதிமுக கூட்டணி: தொடர்ந்து பாஜக தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன், தனிப்பட்ட முறையில் எனக்கு கூட்டணி குறித்து எந்த கருத்தும் கிடையாது என கூறியிருந்தார். விரைவில் பாஜகவுக்கான தேசிய தலைவர் மற்றும் மாநில தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவில் சில மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க பாஜக தலைமையோ அண்ணாமலை தொடர வேண்டும் என விரும்புகிறதாம். மேலும் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என பாஜக நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகிறது.
சசிகலா: ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ பிடிவாதமாக அதனை மறுத்து வருகிறார். அதன் வெளிப்பாடாக செய்தியாளர்களை சந்தித்த அவர் ஓபிஎஸ்ஐ கட்சியில் சேர்த்துக் கொள்ளவே முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார். இப்படியாக அதிமுக பாஜக கூட்டணி தொடர்பாக பல்வேறு விவகாரங்கள் கசிந்து இருக்கும் நிலையில் லேட்டஸ்ட் வரவாக அண்ணாமலை பயணத்திற்கு பிறகு பாஜக தலைமை எடப்பாடி பழனிச்சாமி இடம் பேசியதாக கூறப்படுகிறது. பாஜகவின் அனைத்து நிபந்தனைகளும் சரி தான் என்றாலும் அண்ணாமலை பாஜக தலைவராக தொடர்வார், சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரனை மட்டும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என பாஜக தரப்பு மீண்டும் மீண்டும் அறிவுறுத்தியதாக குறிப்பிடுகிறது.
விஜய் உடன் கூட்டணி: ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ 100 சதவீதம் அதற்கு முடியாது என பதில் அளித்து விட்டாராம். இல்லையெனில் பாமக, தேமுதிக, உள்ளிட்ட கட்சிகளை வைத்து 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க கூட தயார், விஜய் நாம் தமிழர் கட்சியுடன் கூட கூட்டணி பேச்சு வார்த்தையை ஆரம்பிப்பேன் என கூறியதாக சொல்லப்படுகிறது.
விஜய் தரப்பு உற்சாகம்: இந்த தகவல் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் தரப்பை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாஜக ஆதரவுடன் மீண்டும் அதிமுகவில் என்ட்ரி கொடுத்தால் தேர்தலுக்குப் பிறகு கட்சியை கைப்பற்றி விடலாம் என கருதியவர்களுக்கு இந்த அறிவிப்பு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க விஜயுடன் கூட்டணி பேசுவேன் என பாஜக தரப்பிலேயே எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக கூறியிருப்பது விஜய் தரப்பை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தற்போதைக்கு பாஜக திமுக தான் தனது அரசியல் எதிரி என விஜய் கூறியிருந்தாலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காவிட்டால் தமிழக வெற்றி கழகத்தை கூட்டணியில் இணைக்க விஜய் தரப்பு தயாராகவே இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கேற்றார் போல் எடப்பாடி பழனிச்சாமியும் உறுதியாக இருப்பதால் விரைவில் விஜய் எடப்பாடி பழனிச்சாமி தரப்பை தொடர்பு கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications