பட்டென சுட்ட கும்பல்.. பாமக புள்ளி படுகொலை! இதுதான் சட்டம் ஒழுங்கு லட்சணமா? எகிறிய எடப்பாடி!
சென்னை: ராணிப்பேட்டை சோளிங்கரில் பாமக நிர்வாகி சுட்டுக் கொல்லப்பட்டது அம்பலமாகியுள்ளது எனவும், தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை அடியோடு ஒழிக்க வேண்டும், துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? ஒன்றுமே இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. கடந்த ஜூன் 11ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார். இதை அடுத்து சந்தேகம் மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதில் சக்கரவர்த்தி சோளிங்கர் பகுதியில் வழக்கறிஞராக பணியாற்றியதும், பாமக வேலூர் மாவட்ட இளைஞரணி செயலாளராக இருந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது இரு சக்கர வாகனத்தில் சக்கரவர்த்தி சென்ற போது அவரை உரசியபடி சிலர் சென்றதும் அப்போதுதான் அவர் கீழே விழுந்ததும் தெரிய வந்தது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த எட்டாம் தேதி சீனிவாசன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் எட்டு பேரை கைது செய்தனர் போலீசார். அவர்களை வழக்கறிஞரான சக்கரவர்த்தி ஜாமீனில் எடுத்ததால் ஆத்திரமடைந்த சீனிவாசனின் நண்பர்கள் பிரபு, மாதவன் அவரை கொலை செய்ய திட்டமிட்டு பின் தொடர்ந்துள்ளனர். சக்கரவர்த்தி இருசக்கர வாகனத்தில் சென்றபோது அருகே சென்ற இவர்கள் நாட்டுத் துப்பாக்கியால் சக்கரவர்த்தியின் கழுத்தில் சுட்டது தெரிய வந்தது.
இதை அடுத்து சந்தேகம் மரணம் என்ற வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார் பிரபு மாதவனை கைது செய்தனர். அப்போது போலீசாரை நோக்கி மாதவன் பிரபு சுட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பிரபுவின் காலில் துப்பாக்கியால் சுட்டு போலீசார் அவர்களை பிடித்தனர். இந்த சம்பவத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை அடியோடு ஒழிக்க வேண்டும், துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? ஒன்றுமே இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பாமக இளைஞரணி மாவட்டச் செயலாளர் சக்கரவர்த்தி, கடந்த 11.06.2025 அன்று இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்து உயிரிழந்ததாக ஸ்டாலின் மாடல் திமுக அரசால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் துப்பாக்கியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது உடற்கூராய்வின் மூலம் அம்பலமாகியுள்ளது.
அஇஅதிமுக ஆட்சியில் அமைதி, வளம், வளர்ச்சிப் பாதையில் சென்றுக்கொண்டிருந்த தமிழ்நாட்டை,
பட்டாக்கத்தி, அரிவாள், துப்பாக்கியின் பாதைக்கு கொண்டு சென்றுள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இதே இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் பாபு துப்பாக்கி வைத்திருந்த போதே, இந்த அரசை நான் எச்சரித்தேன். ஆனால், துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? ஒன்றுமே இல்லை!
ரோடு ஷோவிலும் , போட்டோஷூட்டிலும் இருக்கும் கவனம், சட்டம் ஒழுங்கை நிர்வகிப்பதிலோ, மக்களைக் காப்பதிலோ இந்த பொம்மை முதலமைச்சருக்கு துளியும் இல்லை! பாமக மாவட்ட இளைஞரணி நிர்வாகி சக்கரவர்த்தி கொலை வழக்கில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; கள்ளத் துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பதை விசாரிக்க வேண்டும்; தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை அடியோடு ஒழித்திட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications