தலைமை பேச்சையே கேட்கல.. அதிமுகவில் இருந்து செந்தில் முருகன் நீக்கம்.. ஈரோடு இடைத்தேர்தலில் சுயேட்சை!
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த அதிமுகவைச் சேர்ந்த செந்தில் முருகன், கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. 10 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது. இடையில் பொங்கல் விடுமுறை வந்ததால் 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடிந்தது. இறுதி நாளான ஜனவரி 17 ஆம் தேதி ஏராளமானோர் போட்டி போட்டுக்கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

ஈரோடு கிழக்கு வேட்பாளர்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக, நாதக உள்பட 58 வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்தனர். திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் வேட்பு மனு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்டோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. அதிமுக பிரமுகரான செந்தில் முருகன், சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவரது வேட்பு மனுவும் ஏற்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்திருந்தது. அமைச்சர்களும், திமுகவினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதால் புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அதிமுக பிரமுகர் சுயேட்சையாக களமிறங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செந்தில் முருகன்
ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா மறைவைத் தொடர்ந்து கடந்த 2023ல் நடந்த இடைத்தேர்தலில் அதிமுகவின் ஓ.பி.எஸ் அணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் செந்தில் முருகன். அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணியின் சார்பில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், அதே நாளில் ஓ.பன்னீர்செல்வம் தனது அணியின் வேட்பாளராக செந்தில் முருகனை அறிவித்திருந்தார்.
பின்னர், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் ஓபிஎஸ் தரப்பினரை சந்தித்து வேண்டுகோள் விடுத்ததால், தனது அணியின் வேட்பாளர் செந்தில் முருகன் போட்டியிலிருந்து வாபஸ் பெறுவார் என்று அறிவித்தார் ஓபிஎஸ். இடைத்தேர்தல் முடிந்ததும், செந்தில் முருகன் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தார். அதிமுகவில், ஈரோடு மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணை செயலாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
சுயேட்சையாக போட்டி
இந்நிலையில் தான் தற்போது செந்தில் முருகன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். அவரது வேட்பு மனுவும் ஏற்கப்பட்டு உள்ளது. அவர் வேட்பு மனுவை வாபஸ் பெற வேண்டும் என அதிமுக தலைமையில் இருந்து அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், தான் போட்டியிடுவதில் செந்தில் முருகன் உறுதியாக இருப்பதால், அவரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவில் இருந்து நீக்கம்
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கட்சியின் கண்ணியத்திற்கு மாக ஏற்படும் வகையில் கட்டுப்பாட்டை மீறி, தலைமை எடுத்த முடிவிற்கு மாறாக, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு, கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், செந்தில் முருகன் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சித் தொண்டர்கள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications