அதிமுக முதல்வர் வேட்பாளர் யோகம் யாருக்கு இருக்கு - இபிஎஸ் ஒபிஎஸ் ஜாதகம் சொல்வதென்ன
முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்படாமலேயே முதல்வர் நாற்காலியில் அமர்ந்த அதிர்ஷ்டசாலிகள் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி. இப்போது இருவரின் ஜாதகப்படி முதல்வர் வேட்பாளர் ஆகும் யோகம் யாருக்கு இரு
சென்னை: 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இடையே பனிப்போர் நிலவி வரும் நிலையில் இருவரின் ஜாதகத்தின் அடிப்படையில் யாருக்கு முதல்வர் வேட்பாளராகும் யோகம் இருக்கிறது என்று பார்க்கலாம்.
தலைவனாகும் தகுதியும் முதல்வர் நாற்காலியில் அமரும் யோகமும் எல்லோருக்கும் வந்து விடாது. காமராஜர், கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என படிப்படியாக மக்கள் மத்தியில் அறிமுகமாகி கட்சிப்பணிகள் செய்து தலைவராக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு முதல்வரானவர்கள். ஓ.பன்னீர் செல்வம் கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்முறையாக முதல்வரான போது அவரை கட்சிக்காரர்கள் தவிர பொது மக்கள் யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. ஜெயலலிதாவிற்கு சிக்கல் ஏற்பட்ட போதெல்லாம் முதல்வராக அறிவிக்கப்பட்டு அந்த நாற்காலியில் கூட அமராமல் ஆட்சி செய்தவர் ஓ.பன்னீர் செல்வம்.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக சசிகலாவினால் முன்னிறுத்தப்பட்டவர். அவர் முதல்வராக அறிவிக்கப்படும் வரை பெரும்பாலான மக்களுக்கு அவரைப்பற்றி தெரிந்திருக்கவில்லை. நான்கு ஆண்டுகள் ஆட்சியை நடத்தி அடுத்த தேர்தலுக்கும் தயாராகி விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவில் இப்போது இரட்டை தலைமை இருப்பதால் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

முதல்வர் வேட்பாளர் யார்
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் பற்றிய சர்ச்சை சில மாதங்களாக நீடித்து வரும் நிலையில் வரும் 7ஆம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்ற அறிவிக்கப்பட உள்ளதாக கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களின் பேச்சுவார்த்தை அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இபிஎஸ், ஓபிஎஸ் ஜாதகம் சொல்வதென்ன
எடப்பாடி பழனிச்சாமி கடந்த 1954ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி பிறந்திருக்கிறார். அந்த தேதியை வைத்து ஜாதகம் கணித்ததில் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் புதன்கிழமை தசமி திதியில் பிறந்திருக்கிறார். சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். முக்கிய கிரகங்களான சூரியன் மேஷம் ராசியில் உச்சம் வெற்றிருக்க சனி துலாம் ராசியில் உச்சம் பெற்றிருக்கிறார். ரிஷபம் ராசியில் சுக்கிரன் ஆட்சி பெற்றிருக்க கூடவே புதன் இணைந்துள்ளார். மிதுனம் ராசியில் கேது குரு கோடீஸ்வர யோகத்தை கொடுத்துள்ளது. தனுசு ராசியில் ராகு கேது சஞ்சரிக்கிறது. சனிதிசையில் முதல்வர் பதவி யோகம் தேடி வந்துள்ளது. இப்போது சனி திசை கேது புத்தி நடக்கிறது.

கிரகங்களின் சஞ்சாரம் சாதகம்
எடப்பாடி பழனிச்சாமிக்கு இப்போது குரு, சனி, ராகு கேது என கோச்சார ரீதியாக கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாகவே உள்ளது. எதிரிகளின் தொல்லைகளை கட்டுப்படுத்தி கட்சியில் ஆளுமையை நிரூபிக்கும் வலிமை கூடி வந்திருக்கிறது. நிகழப்போகும் குரு பெயர்ச்சியும் சாதகமாகவே இருக்கப்போகிறது.

யோகம் யாருக்கு கிடைக்கும்
பொதுவாக முதல்வராக வேண்டும் என்ற அதிர்ஷ்டம் எல்லாருக்கும் கிடைத்து விடாது. ஜாதகக் கட்டங்களில் செவ்வாய், சூரியன், குரு, சந்திரன், புதன், சனி ஆகிய கிரகங்கள் சரியாக அமர்ந்து ராகு கேதுவின் சஞ்சாரமும் யோகத்தை கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே வலிமையான தலைவராக இருந்து நிலையான ஆட்சியை தர முடியும்.

மீனம் ராசியில் பிறந்த ஓபிஎஸ்
மீனம் ராசி ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர் ஓ.பன்னீர் செல்வம். அவருக்கு மூன்று முறை முதல்வர் நாற்காலியில் அமரும் யோகம் கிடைத்தது என்றாலும் நீண்ட நாட்கள் அந்த யோகம் கிடைக்கவில்லை. இப்போது துணை முதல்வராக மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்திருக்கிறார் ஓ. பன்னீர் செல்வம்.

ஜாதகத்தில் என்ன சாதகம்
அரசாளும் தகுதி பெற முக்கியமான கிரகங்கள் வலுவாக இருக்க வேண்டும். அரசாங்க கிரகமான சூரியன், அதிகாரத்துக்குரிய கிரகம் செவ்வாய், மக்களின் நன்மதிப்பை தரக்கூடிய சனி ஆகிய கிரகங்கள் ஓபிஎஸ் ஜாதகத்தில் வலுவாக இருக்கின்றன. மேலும், குரு ராகு சாரத்திலும் ராகு குருவின் சாரத்திலும் இருப்பது நல்ல அம்சம்.

கிரகங்களின் அமைப்பு எப்படி
ஓ.பன்னீர் செல்வத்திற்கு இப்போது குரு சாதகமான நிலையில் இல்லை என்றாலும் நவம்பர் மாதத்திற்குப் பிறகு சாதகமான நிலைக்கு மாறுகிறார். அதே போல ராகு கேது பெயர்ச்சி இப்போது வெற்றியை தரக்கூடியதாக இருக்கிறது. மக்களின் நன் மதிப்பை தரக்கூடிய சனி சாதகமான நிலையில் தற்போது ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறது. இந்த அமைப்பு படி பார்த்தால் முதல்வர் வேட்பாளராகும் யோகம் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சாதகமாகவே இருக்கிறது.

ஒற்றுமைதான் வெற்றிக்கு வழி
எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் இரண்டு பேரின் ஜாதகமும் தற்போது கிரகங்களின் கோச்சார ரீதியான சஞ்சாரமும் சாதகமாகவே இருக்கிறது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதால்தான் ஜெயலலிதா என்ற மிகப்பெரிய ஆளுமை மறைந்த பின்னரும் ஆட்சியை நடத்த முடிந்திருக்கிறது. இரண்டு ஆளுமைகளில் யார் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் தொண்டர்களின் ஆதரவு கிடைக்கும்.

இரட்டை இலைக்கு வாக்கு
ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இரண்டு ஆளுமைகளும் ஒற்றுமையோடு தேர்தலை சந்திக்க வேண்டும் என்றுதான் அதிமுக தொண்டர்கள் விரும்புகின்றனர். நீயா நானா என்று போட்டி போட்டு பிரிந்தால் கட்சி உடைபடும் இரட்டை இலை என்ற சின்னமும் முடக்கப்படும். எனவே2021ஆம் ஆண்டு நடைபெறப்போகும் சட்டசபை தேர்தலை இருவரும் இணைந்து தேர்தலை சந்தித்தால் மட்டுமே வெற்றியை ருசிக்க முடியும் முதல்வர் நாற்காலியில் அதிமுகவை அமரவைக்க முடியும் என்கின்றனர் தொண்டர். கட்சித்தலைவர் தலைவர்கள் இதனை ஏற்பார்களா?












Click it and Unblock the Notifications