இது புது ட்விஸ்ட்டா இருக்கே! மாஃபா பாண்டியராஜனுக்கு செக்..சரத்குமாரை இழுத்து விடும் ராஜேந்திர பாலாஜி
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆவடியை விட்டு விருதுநகரில் போட்டியிடத் தீவிரமாகக் காய் நகர்த்தி வருகிறார் அதிமுக முன்னாள் அமைச்சரான மாஃபா பாண்டியராஜன். இந்த நிலையில் மாவட்டச் செயலாளரான ராஜேந்திர பாலாஜி மாஃபா பாண்டியராஜனை விருதுநகருக்குள் நுழைய விடக் கூடாது எனத் தீவிரமாகக் காய் நகர்த்தி வருகிறார். இந்த நிலையில் விருதுநகரில் போட்டியிட்டால் நான் வெற்றி பெற வைக்கிறேன் என நடிகர் சரத்குமாரை உசுப்பேற்றிவிட தற்போது டெல்லிக்குச் சென்று இருக்கிறார் சரத்குமார்.
ஜெயலலிதா இருந்தபோது அவரது குட் புக் பட்டியலில் இருந்த அமைச்சர்களில் ஒருவராக இருந்தவர் மாஃபா பாண்டியராஜன். 2009ஆம் ஆண்டு வரை நடிகர் விஜயகாந்தின் தேமுதிக கட்சியில் இருந்த மாஃபா பாண்டியராஜன், 2009 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
அதற்குப் பிறகு 2011 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக - அதிமுக கூட்டணியில் இணைந்தபோது விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்குப் பிறகு விஜயகாந்த் - அதிமுக இடையே மோதல் வெடித்த நிலையில் 9 தேமுதிக எம்எல்ஏக்கள் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர்.

மாஃபா பாண்டியராஜன்
பின்னர் 2016 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அவர் அமைச்சராக இருந்தார். ஓபிஎஸ் அதிமுகவிலிருந்து முதன்முறையாக வெளியேற்றப்பட்டபோது அவர் பக்கம் சென்ற ஒரே அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு கட்சியை இணைத்தபோது எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்று அவர், மீண்டும் ஓபிஎஸ் வெளியேற்றப்பட்டபோது எடப்பாடி பழனிசாமி தரப்பிலேயே இருந்து கொண்டார். இருந்தபோதும் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் என்ற முத்திரை பாண்டியராஜன் மீது இருக்கிறது.
ராஜேந்திர பாலாஜி
தொடர்ந்து 2021 தேர்தலில் ஆவடியில் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் விருதுநகர் அரசியலுக்கு செல்ல முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விருதுநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரபாலாஜிக்கும் பாண்டியராஜனுக்கும் மோதல் வெடித்துள்ளது. பாண்டியராஜன் மாவட்ட அரசியலுக்குள் வந்தால் தனக்கான முக்கியத்துவம் குறைந்து விடுமோ என நினைக்கும் ராஜேந்திர பாலாஜி, அவருக்கு எதிராக காய் நகர்த்தி வருகிறார்.
விருதுநகர் அதிமுக
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொலைக்காட்சி ஒன்றிடம் பேசிய மாஃபா பாண்டியராஜன், ராஜேந்திர பாலாஜி குறுநில மன்னர் போர் செயல்படுகிறார் என கூறினார். இதனால் இருவருக்கும் இடையே நிலவி வந்த பனிப்போர் நேரடி மோதலாக வெடித்தது. தொடர்ந்து அதிமுக கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி," பல கட்சிகளில் இருந்து வந்தவன் நீ.. வெட்கமாக இல்லையா.. நீ வந்து என்னிடம் போட்டி போடுகிறாயா?" என ஒருமையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் சரத்குமார்
இதை அடுத்து கடும் அதிர்ச்சியில் இருந்த பாண்டியராஜன் திமுகவுக்கு தாவலாம் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் 2026 தேர்தலில் விருதுநகரில் போட்டியிட திட்டமிட்டு வருகிறார் பாண்டியராஜன் என்ற தகவலை அறிந்த ராஜேந்திர பாலாஜி தரப்பு அவருக்கு எதிர் அரசியல் செய்ய தயாராகி வருகிறது. குறிப்பாக சமத்துவ மக்கள் கட்சியை கலைத்து விட்டு பாஜகவில் இணைந்த சரத்குமாரை விருதுநகரில் போட்டியிட வைக்க தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார் ராஜேந்திர பாலாஜி.
பாஜக
விருதுநகர் தொகுதியை பாஜகவுக்கு பெற்றுத் தர வேண்டியது எனது பொறுப்பு நீங்கள் நின்றால் என்ன செலவானாலும் பரவாயில்லை. உங்களை வெற்றி பெற வைக்கிறேன் எனக் கூறி இருக்கிறாராம். இந்த நிலையில் டெல்லி சேர்ந்திருக்கும் சரத்குமார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசி இருக்கா கட்சியில் சேர்ந்து உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சியில் இருந்த சரத்குமாருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக புதிய பொறுப்பு அளிக்கப்பட்டது.
அமித்ஷா
இந்த நிலையில் மாநில அரசியலைக் கவனிக்கும் வகையில் துணைத்தலைவர் பதவியை சரத்குமார் எதிர்பார்ப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும் ராஜேந்திர பாலாஜியின் பேச்சைக் கேட்டு விருதுநகரில் போட்டியிடத் திட்டமிட்டுள்ள சரத்குமார், அது தொடர்பாக பாஜக தலைமையிடம் இப்போதே பேசியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர்கள் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், தற்போது தனியே சரத்குமார் அமித் ஷாவை சந்தித்துப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications