அப்பா புது வீட்டுக்கு வாங்க... மகனின் அழைப்பை ஏற்று டெல்லி பறந்த ஓ.பன்னீர்செல்வம்..!
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் திடீர் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றது அரசியல் வட்டாரத்தில் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
ஓ.பி.எஸ். மேற்கொண்டுள்ள டெல்லி பயணம் குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகி வருவதால் இது தொடர்பான விவாதம் எழுந்துள்ளது.
இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் டெல்லியில் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள புதுவீட்டிற்கு அப்பா ஓ.பி.எஸ். வரவேண்டும் என ரவீந்தரநாத் குமார் விரும்பியதன் பேரில் அவர் இந்த பயணத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அ.தி.மு.க ஆட்சியில்.. தரமற்ற மாஸ்க் வழங்கப்பட்டன.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு குற்றச்சாட்டு!
டெல்லி பயணம்
தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. சசிகலாவின் அரசியல் ரீ என்ட்ரி, முன்னாள் அமைச்சர்கள் மீதான ரெய்டு, இரட்டை தலைமையால் ஏற்பட்டுள்ள பனிப்போர் என அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறும் காட்சிகளால் ஓ.பி.எஸ்.ஸின் டெல்லி பயணம் அனைவராலும் கவனிக்கப்படுகிறது.
புது வீடு
இதனிடையே தேனி மக்களவைத் தொகுதியிலிருந்து வெற்றிபெற்று எம்.பி.யாகிய ஓ.பி.எஸ். மகன் ரவீந்தரநாத் குமாருக்கு அண்மையில் தான் டெல்லி நிர்மல் பவன் அருகே புதிய இல்லம் ஒதுக்கி தரப்பட்டது. அந்த இல்லத்திற்கு வந்து வாழ்த்த வேண்டும் என மகன், மருமகள் ஆகியோர் விடுத்த அழைப்பின் காரணமாகவே ஓ.பி.எஸ். டெல்லி புறப்பட்டுச் சென்றதற்கான காரணம் கூறப்படுகிறது.
மகன் வீடு
மகன் வீட்டிற்கே சென்றிருந்தாலும் கூட பாஜகவின் சில உயர்மட்ட தலைவர்களை ஓ.பி.எஸ். சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் பாஜக கூட்டணி குறித்து முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, சி.வி.சண்முகம் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் பாஜகவின் டெல்லி தலைமை வரை சென்று, பிறகு அதனை சமாளிக்கும் வகையில் ஓ.பி.எஸ். அறிக்கை விட்ட கதையும் நடந்தது.
பிரதமருடன் சந்திப்பு?
ஒரு நாள் மகன் வீட்டில் தங்கும் ஓ.பி.எஸ். பிரதமர் மோடியை சந்திப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார் எனத் தெரிகிறது. எனினும் இதுவரை பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஓ.பி.எஸ்.க்கு நேரம் ஒதுக்கித்தரப்படவில்லை. இதனிடையே பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் அண்ணன் சந்திப்பார் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்.