தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. அதிமுக 2 டீமுக்குமே ஆபத்து! சபாநாயகர் கையில் தான் எல்லாமே! அதகள அதிமுக
சென்னை:தமிழக அரசியலில் அதிமுக உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பும், சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தரப்பும் தனித்தனியாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவாக 25 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்ததிலிருந்து, கட்சிக்குள் இருந்த கருத்து வேறுபாடு வெளிப்படையான மோதலாக மாறியுள்ளது. இந்நிலையில், யாருக்கு அதிமுக சட்டசபை குழு தலைவராக சபாநாயகர் அங்கீகாரம் தரப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. யாருக்கு அங்கீகாரம் அளித்தாலும், எதிர்தரப்பு எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிபோகும் ஆபத்து உள்ளதால், சபாநாயகர் ஜேசிடி பிராபகர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு வெற்றி பெற்றபோது, அ.தி.மு.க.வில் இருந்து எஸ்பி வேலுமணி - சிவி சண்முகம் பிரிவைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவு தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

இதையடுத்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சி கட்டுப்பாட்டை மீறி நடந்துகொண்டதாக கூறி சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் கட்சிப் பொறுப்புகளை பறித்தார்.
அதிமுக பிளவு
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சண்முகம் தரப்பு, "எங்களை யாராலும் கட்சியில் இருந்து நீக்க முடியாது. உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் நாங்கள்தான்" என்று பதிலடி கொடுத்தது. அதோடு சட்டப்பேரவையில் பெரும்பான்மை ஆதரவு தங்களிடமே இருப்பதாகவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் இருதரப்பினரும் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை தனித்தனியாக சந்தித்து மனுக்கள் அளித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி தரப்பு, "கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரியுள்ளது. மறுபுறம் சண்முகம் - வேலுமணி தரப்பு, "சட்டப்பேரவை குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணியும், கொறடாவாக சி. விஜயபாஸ்கரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதனை அங்கீகரிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளது.
சட்டப்பேரவை
இந்த விவகாரத்தில் பேரவைத் தலைவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது தற்போது தமிழக அரசியலின் மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது. காரணம், யாரை அங்கீகரிக்கிறார் என்பதிலேயே சட்டப்பேரவையில் அ.தி.மு.க.வின் அதிகாரம் எந்த அணிக்கு செல்லும் என்பது தீர்மானிக்கப்படும். இதற்கிடையே, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள்
அப்போது பல மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. "கட்சித் தலைமையின் உத்தரவை மீறிய எம்.எல்.ஏ.க்களை உடனடியாக தகுதி நீக்கம் செய்ய சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "முதலில் பேரவைத் தலைவர் என்ன முடிவு எடுக்கிறார் என்பதை பார்த்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்" என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சி.வி. சண்முகம்
அதே நேரத்தில், சி.வி. சண்முகம் தரப்பும் தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளது. விரைவில் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்று அவசர பொதுக்குழுவை கூட்டும் திட்டத்தில் அவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கட்சியின் கட்டுப்பாட்டை கைப்பற்றும் முயற்சியில் அந்த அணி தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த மோதல் காரணமாக அ.தி.மு.க. தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதியிலும் பதற்றம் நிலவி வருகிறது.
சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்
எந்த நேரத்திலும் இருதரப்பினரிடையே மோதல் ஏற்படலாம் என்ற அச்சத்தில் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அளித்துள்ள பதில் மேலும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "மனுக்கள் மீது முடிவெடுக்க எந்த காலக்கெடும் இல்லை. அனைத்து மனுக்களும் பரிசீலனையில் உள்ளன. உரிய நடைமுறைகளின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
யாருக்கு அங்கீகாரம்?
இதனால் உடனடி தீர்வு எதுவும் வரப்போவதில்லை என்பது தெளிவாகியுள்ளது. அதே நேரத்தில்,யாருக்கு அதிமுக சட்டசபை குழு தலைவராக சபாநாயகர் அங்கீகாரம் தரப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், யாருக்கு அங்கீகாரம் அளித்தாலும், எதிர்தரப்பு எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிபோகும் ஆபத்து உள்ளதால், சபாநாயகர் ஜேசிடி பிராபகர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications