புறக்கணித்த திமுக கூட்டணி கட்சிகள்.. ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்பதாக அதிமுக அறிவிப்பு
சென்னை: ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க உள்ளதாக தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக அறிவித்துள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், அதிமுக பங்கேற்பதாக கூறியுள்ளது. இதேபோல் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.
நாட்டின் 75 வது குடியரசு தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தினமான இன்று மாலை 4.30 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் வைத்து தேநீர் விருந்து நடைபெற உள்ளது. இந்த தேநீர் விருந்துக்கு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆளுநரின் தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சியும் புறக்கணிப்பதாக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்தார்.

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக கம்யூனிஸ்ட் கட்சியினரும் அறிவித்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் ஆளுநர் மாளிகை அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. எனினும் தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சேகர் பாபு, ரகுபதி, மா சுப்பிரமணியன் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆளுநர் அளிக்கும் விருந்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளது. இதேபோல் பாஜக சார்பில் ஜி கே மணி பங்கேற்கிறார். சுதந்திர தினம், குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் முக்கியப் பிரமுகர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி குடியரசு தினத்தையொட்டி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த தேநீர் விருந்தில் பங்கேற்க முக்கிய அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு ஆளுநர் மாளிகை தரப்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications