4 முக்கிய விஷயம்.. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் துவங்கிய மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..ஏன் முக்கியம்?
சென்னை: அதிமுகவில் உள்கட்சி பூசல் முக்கிய கட்டத்தை எட்டிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கடந்த 21ம் தேதி ஓ பன்னீர் செல்வம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்திய நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார். இதனால் இன்றைய கூட்டம் என்பது முக்கியத்துவம் பெறுகிறது.
அதிமுகவில் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இரட்டை தலைமையாக செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் தான் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
இதையடுத்து ஓ பன்னீர் செல்வம் ஓரம்கட்டப்பட்டார். எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கியது. இதையடுத்து நடந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

அதிமுக வழக்கு
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வானதும், நடந்த பொதுக்குழுவும் செல்லாது எனக்கூறி ஓ பன்னீர் செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது நிலுவையில் உள்ளது. இதற்கிடையே தான் ஓ பன்னீர் செல்வம் அணி, எடப்பாடி பழனிச்சாமி அணியையும், எடப்பாடி பழனிச்சாமி அணியினர் ஓபன்னீர் செல்வம் அணியையும் தாக்கி பேசி வருகின்றனர்.

எடப்பாடிக்கு ஓபிஎஸ் சவால்
மேலும் ஓ பன்னீர் செல்வம் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். மேலும் கடந்த 21ம் தேதி சென்னையில் ஓ பன்னீர் செல்வம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் ஓ பன்னீர் செல்வம் கடுமையாக எடப்பாடி பழனிச்சாமியை தாக்கி பேசினார். எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை கைப்பற்ற நினைக்கிறார். அவர் சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டு வருகிறார். வேண்டுமானால் புதிய கட்சியை துவங்கி அவர் நடத்தட்டும் என சவால் விடுத்தார்.

வக்கீல் நோட்டீசுக்கு பதில்
இந்த கூட்டம் நடந்த மறுநாளே, கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அதிமுகவின் கொடி, சின்னம், சீல்களை பயன்படுத்த கூடாது என அதிமுக சார்பில் ஓ பன்னீர் செல்வத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசுக்கு ஓ பன்னீர் செல்வம் பதிலளித்துள்ளார். அதில், தான் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது செல்லாது. இதனால் கட்சியின் கொடி, சின்னம், சீல்களை பயன்படுத்துவதில் விதிமீறல் இல்லை. கட்சியில் இருந்து நீக்கம் தொடர்பான முடிவை தொண்டர்கள் தான் எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதனால் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் அணியினர் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.

எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை
இந்நிலையில் தான் இன்று காலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் காலை 10.45 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி வந்தார். காரில் வந்த அவரை தொண்டர்கள் மலர்தூவி வரவேற்றனர். இதையடுத்து கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மட்டுமின்றி எம்பி, எம்எல்ஏக்கள், செய்தி தொடர்பாளர்கள் என அனைவரும் பங்கேற்றுள்ளனர்.

4 முக்கிய விஷயம்
இந்த கூட்டத்தில் முக்கியமாக 4 விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதில் பொதுக்குழு தொடர்பான வழக்கு ஜனவரி முதல் வாரத்தில் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது. இதுபற்றி விவாதிக்கப்பட உள்ளது. மேலும் ஓ பன்னீர் செல்வம் அளித்த வக்கீல் நோட்டீஸ் தொடர்பான விவகாரம் பற்றியும், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் கட்சியை பலப்படுத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது. மேலும் அடுத்த மாதம் சட்டசபை கூட்டத்தொடர் நடத்தப்பட உள்ளது. இதில் ஓ பன்னீர் செல்வத்துக்கு மாற்றாக ஆர்பி உதயக்குமார் துணை எதிர்க்கட்சி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை சபாநாயகர் அப்பாவு ஏற்காவிட்டால் எப்படி எதிர்க்க வேண்டும் என்பது பற்றியும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications