அண்ணாமலை பாதயாத்திரை.. எடப்பாடிக்கு அழைப்பு.. "அவரும்" வருகிறார்.. சந்திப்பு நடக்குமா?
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்கிறார். இந்த பாதை யாத்திரை வரும் 28 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்குகிறது. அண்ணாமலையின் இந்த பாதயாத்திரை துவக்க விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். என் மண், என் மக்கள் என்ற பெயரில் அண்ணமாலை தொடங்க இருக்கும் இந்த பாதயாத்திரை வரும் 28 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்குகிறது. முன்னதாக கடந்த ஏப்ரல் 14-ந்தேதி தனது பாத யாத்திரையை அண்ணாமலை தொடங்க திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் கர்நாடக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதால் தனது திட்டத்தை ஒத்திவைத்தார். இதையடுத்து ஜூலை 28 ஆம் தேதி முதல் 'என் மண்-என் மக்கள்' என்ற கோஷத்துடன் இந்த பாதயாத்திரையை தமிழ்நாடு முழுவதும் கிராமம் கிராமமாக நடத்த அண்ணாமலை முடிவு செய்துள்ளார். அண்ணாமலையின் பாத யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார்.
முதல் கட்டமாக ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் நடைபெறுகிறது. வரும் 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 22-ந்தேதி வரை நடக்கிறது. 5 கட்டங்களாக நடைபெறும் அண்ணாமலையின் பாதயாத்திரை ஜனவரி மாதம் சென்னையில் நிறைவு பெறுகிறது. மொத்தம் 100 நாட்கள் யாத்திரை நடக்கிறது.
இந்த பாதயாத்திரையின் போது புகார் பெட்டி ஒன்றும் கொண்டு செல்லப்படுகிறது. பொதுமக்கள் புகார்களை அந்த பெட்டியில் போடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. புகார் பெட்டி அறிமுகப்படுத்தும் விழா அண்மையில் நடைபெற்றது. 234 தொகுதிகளிலும் நடைபெறும் அண்ணாமலையின் பாதயாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
எடப்பாடி அமித்ஷா சந்திப்பு நடக்குமா?: இதனிடையே, அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா குறித்து அண்ணாமலை முன்வைத்த சில கருத்துக்களால் அதிமுகவுக்கும் அண்ணாமலைக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி இந்த பாத யாத்திரை துவக்க விழாவில் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முன்னதாக, அமித்ஷா கடந்த முறை சென்னை வரும் போது எடப்பாடி பழனிசாமியை சந்திக்க விரும்பினார். ஆனால், எடப்பாடி பழனிசாமி கால் வலிக்கு சிகிச்சை எடுத்து இருந்ததால் அப்போது இந்த சந்திப்பு நிகழவில்லை. இதையடுத்து, அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி இடையேயான சந்திப்பு இந்த முறை நிகழ வேண்டும் என பாஜக தலைமை விரும்புவதாகவும் அதன் அடிப்படையில் தான் எடப்பாடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கலாம் எனவும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications