'இசை வாழ்த்து' பேரன் கொடுத்த பிறந்தநாள் சர்ப்ரைஸ்.. பூரித்து எமோஷனலான ஜெயக்குமார்!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அவரது பேரன் இசை வாழ்த்து கூறியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
2011 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியின் போது சபாநாயகர், நிதியமைச்சர், மீன் வளத்துறை அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர். 1990களில் அதிமுகவில் இணைந்த ஜெயக்குமாருக்கு, 1991ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அந்தத் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவராக ஜெயக்குமார் மாறினார். இதனால் அப்போதே கால்நடை பராமரிப்பு, மீன்வளம் உள்ளிட்ட துறைகளுக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
படிக்கும்போதே புல்லட்டில் சென்றவர் ஈபிஎஸ்! ஆர்.எஸ்.பாரதி அப்படியா? ஜெயக்குமார் விமர்சனம்
அமைச்சர் பதவி
அதனைத்தொடர்ந்து 2001-06 ஆம் கால அமைச்சரவையில் சட்டம், தகவல் தொழில்நுட்பம், மின்சாரம் ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்தார். தொண்டர்கள் எளிதாக அணுகக் கூடியவராகவும், தொகுதி மக்கள் எளிதாக அணுகக் கூடியவராக இருப்பதால், ஜெயக்குமாருக்கு அவரது தொகுதியில் தனி மரியாதை இருக்கிறது.
இபிஎஸ் ஆதரவு
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் திமுக அரசு அதிமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், ஒவ்வொரு குற்றச்சாட்டுகளையும் அச்சமின்றி எதிர்கொண்டு பதில் அளித்தவர். 2017ல் இபிஎஸ் - ஓபிஎஸ் பிரிவின் போது இபிஎஸ் ஆதரவு நிலைப்பாடு எடுத்து, ஆதரவாக செயல்பட்டார். இப்போதும் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் இபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் செயல்பட்டு வருகிறார்.
அதிமுகவின் முகம்
எடப்பாடி பழனிசாமி தரப்பில் எவ்வித விளக்கம் அளிக்க வேண்டும் என்றாலும், அதனை ஜெயக்குமார் வழியாக சொல்லப்படும். அதேபோல் திமுக அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து தீவிரமாக விமர்சித்து வருகிறார். தமிழக அரசியலில் முக்கிய நபராக வலம்வரும் ஜெயக்குமார், இன்று தனது 62வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
ஜெயக்குமார் பிறந்தநாள்
இவருக்கு அதிமுக தொண்டர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும், அலைபேசி வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஜெயக்குமாருக்கு முக்கியமான ஒரு நபரிடம் இருந்து ஸ்பெஷல் வாழ்த்து கிடைத்துள்ளது. ஜெயக்குமாரின் பேரன் தனது கீ போர்ட் இசைக்கருவி மூலம் இசைத்து தனது தாத்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜெயக்குமார் நெகிழ்ச்சி
இதனை மஞ்சள் நிற டீ-சர்ட் அணிந்து பின்னால் அமர்ந்து நெகிழ்ச்சியுடன் ஜெயக்குமார் ரசித்து பார்த்துக்கொண்டுள்ளார். இதனை அவரது வீட்டில் உள்ளவர்கள் வீடியோவாக பதிவு செய்த நிலையில், அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "எத்தனையோ விதமான பிறந்தநாள் வாழ்த்துகள் என்னுடைய இத்தனை ஆண்டுகளில் வந்துள்ளது. அவற்றில் இது கூடுதல் ஸ்பெஷல்... என்னுடைய பேரனின் விரல்களின் வழியே எனக்கு இசைவாழ்த்து" என்று குறிப்பிட்டுள்ளார்.
இணையத்தில் வாழ்த்து
ஜெயக்குமாருக்கு அவரது பேரன் இசைவாழ்த்து தெரிவித்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் மக்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவரது பேரனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.