ஓடாத காளை.. யாரு அண்ணாமலை முதல்வரா?.. இலவு காத்த கிளிதான்.. ஜெயக்குமார் கடும் விமர்சனம்
சென்னை: ஓடாத காளைகளுடன் மோதுவதில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
எம்ஜிஆரின் 107 ஆவது பிறந்தநாள் இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பதாவது: மக்களுக்கு தேவையான சிறந்த கருத்துகளை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து காட்டியவர் எம்ஜிஆர்.

அண்ணாவின் கொள்கை லட்சியங்களை பின்பற்றி திரைப்படங்களில் கழகத்தை பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சேர்த்து அதிமுக வெற்றியடைய செயல்பட்டவர் எம்ஜிஆர். ஆகவே எம்ஜிஆர் தான் கிரேட்டஸ்ட் ஆஃப் டைம் (GOAT).
அண்ணாமலை தமிழ்நாட்டின் முதல்வர் ஆவது என்பது இலவுகாத்தகிளி கதை போன்றுதான். தமிழகத்தில் இரட்டை இலை துளிர்விட்டு வளர்ந்திருக்கும் போது தாமரை மலர்வது நடக்காது. அரசியலில் ஓடாத காளைகள் அதிகமாக உள்ளது. ஓடாத காளைகளுடன் நாங்கள் மோதுவதில்லை.
2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி மலரும். தமிழர்களின் அடையாளத்தை யாராலும் மாற்ற முடியாது. தமிழர்கள் வீரமும், காதலும் இல்லாதவர்கள் அல்ல என ஜெயக்குமார் தெரிவித்தார்.
அதிமுக பாஜக இடையே கடந்த 2019ஆம் ஆண்டு கூட்டணி உருவாகியிருந்த நிலையில் இந்த கூட்டணியில் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டு வந்தாலும் கூட்டணி உடையாமல் இருந்தது. இதற்கு பரஸ்பரம் இரு கட்சிகளின் மூத்த தலைவர்களும் சமரசம் பேசி கூட்டணி முறியாமல் பார்த்துக் கொண்டனர்.
கூட்டணி என கூறிக் கொண்டே தமிழகத்தில் இருந்து 25 பாஜக எம்பிக்களை அனுப்புவோம் என அண்ணாமலை உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் தெரிவிப்பார்கள். ஆனால் தமிழகத்தில் 39 தொகுதிகளில் பாஜகவுக்கு 25 தொகுதிகளை கொடுத்துவிட்டு நாங்கள் என்ன செய்வது என அதிமுகவினரும் கொந்தளித்து வந்தனர்.
இந்த நிலையில் ஒரு கட்டத்தில் கூட்டணியை முறித்துக் கொள்வதாக ஜெயக்குமார் மூலம் அறிவிக்கப்பட்டது. இந்த கருத்தையே எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்திருந்தார். இது தான் மட்டுமே எடுத்த முடிவில்லை, ஒட்டுமொத்த கட்சியினரும் எடுத்த முடிவு என்றும் மாநிலத்தின் உரிமையை காக்க அதிமுக நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் என்றும் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications