பாஜகவின் நயினார் நாகேந்திரன் வீசிய வலையில் விழுந்த முதல் விக்கெட் கே.டி.ராஜேந்திர பாலாஜி?
சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் சட்டசபை குழு தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டதும் முதல் வேலையாக அதிமுகவில் இருந்து ஆட்களை இழுக்கும் படலத்தை அரங்கேற்ற தொடங்கிவிட்டார். முதல் விக்கெட்டாக முன்னாள் அமைச்சர் சர்ச்சைக்குரிய கே.டி. ராஜேந்திரபாலாஜியை பாஜகவுக்கு இழுத்துவிட்டாராம் நயினார் நாகேந்திரன்.
தமிழகத்தில் தங்களுடைய வலதுசாரி சித்தாந்தத்தை பேசிப் பார்த்தது பாஜக. ஒருகட்டத்தில் கழகங்கள் இல்லாத தமிழகம் எனவும் கோஷம் எழுப்பியது. ஆனாலும் அம்மஞ்சல்லி பைசாவுக்கு கூட பாஜகவின் இந்த கோஷம் கை கொடுக்கவில்லை.
இதனால் வேறுவழியே இல்லாமல் 2019 லோக்சபா தேர்தலிலும் தற்போதைய சட்டசபை தேர்தலிலும் அதிமுகவின் முதுகில் ஏறி அமர்ந்தது பாஜக. லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த ஒற்றை காரணத்துக்காகவே அதிமுகவுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. அந்த கட்சிக்கு ஒரே ஒரு இடம்தான் கிடைத்தது. அத்தனை இடங்களையும் திமுக கூட்டணி அள்ளியது.

அதிமுக தயவில் 4 எம்.எல்.ஏக்கள்
சட்டசபை தேர்தலிலும் மிகப் பெரிய கணக்கு போட்டு அதிமுகவை நெருக்கிப் பார்த்தது பாஜக. ஆனால் பாஜகவின் தமிழக பலத்துக்கு மீறி 20 தொகுதிகளை கொடுத்தது அதிமுக. இதில் 4 இடங்களில் பாஜக வென்றுவிட்டது. 2001-ல் திமுக துணையோடு 4 எம்.எல்.ஏக்களை அனுப்பிய பாஜக இப்போது அதிமுக ஆதரவுடன் மீண்டும் 4 எம்.எல்.ஏக்களை சட்டசபைக்கு அனுப்பி இருக்கிறது.

புதுச்சேரியில் பாஜக
இந்த முறை பாஜக 4 எம்.எல்.ஏக்களுடன் சும்மா இருக்கப் போவது இல்லை என்பதை நாடு நன்கு அறியும். எந்த மாநிலத்தில் தம்முடன் கூட்டணி சேருகிறதோ அந்த கட்சியை கரைத்து காணாமல் போகச் செய்வதுதான் பாஜகவின் பாணி. புதுச்சேரியில் 6 எம்.எல்.ஏக்களைப் பெற்ற பாஜக, இப்போது எத்தனை குறுக்கு வழி இருக்கிறதோ அத்தனை வழிகளிலும் ஆட்சி அதிகாரத்தை தமதாக்கிக் கொள்ள துடியாய் துடிக்கிறது.

டார்கெட் அதிமுக
இப்போது மெல்ல மெல்ல தமிழகத்தில் அதிமுகவை தன்வயப்படுத்தும் வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டது பாஜக. அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளில் இல்லாமல் ஊழல் புகார் நெருக்கடிகளில் சிக்கி இருக்கும் மாஜி அமைச்சர்கள்தான் முதல் டார்கெட்டாம். இப்படி கட்சி தாவ வைப்பதற்காகவே அதிமுகவில் இருந்து வந்த நயினார் நாகேந்திரனுக்கு சட்டசபை குழு தலைவர் பதவியும் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

பாஜகவுக்கு போகும் கே.டி.ஆர். பாலாஜி
நயினார் நாகேந்திரன் தமக்கு கொடுக்கப்பட்ட வேலையை கனகச்சிதமாக செய்ய தொடங்கிவிட்டார் என்கின்றன தென்மாவட்ட செய்திகள். நயினார் வீசிய வலையில் சிக்கியிருப்பது அதிமுக மாஜி அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜிதானாம். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மோடி எங்கள் டாடி என்றார். பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றை வானளாவ புகழ்ந்து ஏற்கனவே சிக்னல் கொடுத்து காத்திருந்தவர்தான் இந்த கே.டி. ராஜேந்திர பாலாஜி.

பாஜகவுக்கு போகும் அதிமுக கோஷ்டி
அதனால் அவர் பாஜகவுக்கு தாவுகிறார் என்பதில் வியப்பு இல்லை. ஆனால் கே.டி. ராஜேந்திர பாலாஜியை தொடர்ந்து அடுத்தடுத்து அதிமுக மாஜிக்கள் பாஜகவில் வரிசையாக அணிவகுக்கக் கூடுமாம். இப்போது அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் என கோஷ்டிகளாக பிரிந்து கிடக்கிறது. இவர்கள் இல்லாமல் சசிகலா அணி என்பது வெளியே தெரியாமல் இருக்கிறது. அதேபோல்தான் பாஜகவுக்கு போகப் போகிற ஒரு அணியும் வெற்றிகரமாக உருவாகிவிட்டதாம். என்னதான் ஆகப் போகிறதோ அதிமுக?












Click it and Unblock the Notifications