”அதிமுகவை அழிக்கும் வரை ஓபிஎஸ் ஓயமாட்டார்” இதுவெறும் நாடகம்தான்.. ஆர்பி உதயகுமார் காட்டம்!
சென்னை: அதிமுகவை தனது குடும்ப சொத்தாக்கும் நோக்கில் தான் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்ற நாடகத்தை ஓபிஎஸ் அரங்கேற்றுவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காட்டமாக விமர்சித்துள்ளார்.
உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு முன் அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு, அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பையடுத்து கப்சிப் என்று மாறியுள்ளது.
இதனால் தங்கள் தரப்பை வலுவாக்கும் முயற்சியில் ஓபிஎஸ் தரப்பு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. அதற்கு வலுசேர்க்கும் வகையில் இபிஎஸ் அணியில் இருந்த உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன், ஓபிஸ் பக்கம் தாவி இருக்கிறார்.

முன்பே கணித்த உதயகுமார்
சில நாட்களுக்கு முன் ஆர்பி.உதயகுமார், தொண்டர்களின் விஸ்வாசத்தை பதவி, பணம் என்று விலைபேசிவிட முடியாது. அதிமுக தொண்டர்களை விலை பேசும் யுத்தத்தை ஓபிஎஸ் தொடங்கியுள்ளார். அரசியல் எதிர்காலத்தை தொலைத்துவிட்டு பன்னீர்செல்வம் ஆதரவின்றி நிற்கிறார். ஓபிஎஸ் எடுத்துவரும் ஒவ்வொரு முயற்சியும் அவருக்கு பின்னடைவை தரப்போகிறது என்று தெரிவித்திருந்தார்.

அணிமாறிய ஐயப்பன்
இந்த நிலையில் உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் ஓபிஎஸ் அணிக்கு மாறியுள்ளார். இது எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், இபிஎஸ் தரப்பில் தென் மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக பார்க்கப்பட்ட ஆர்.பி.உதயகுமாருக்கு தான் பெரும் பின்னடைவாக மாறியுள்ளது. இதுமட்டுமல்லாமல், இன்னும் ஏராளமான அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஓபிஎஸ் அணிக்கு வருவார்கள் என்று உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் கூறியுள்ளது இபிஎஸ் கூடாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ் மீது விமர்சனம்
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறுகையில், அதிமுகவை அழிக்கும் வரை ஓபிஎஸ் ஓயமாட்டார். அதிமுகவை தனது குடும்ப சொத்தாக்கும் நோக்கில் தான் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்ற நாடகத்தை ஓபிஎஸ் அரங்கேற்றுகிறார்.

அண்ணா டிடிவி தினகரன்
ஆனால் அதிமுகவை ஓபிஎஸ் தனது குடும்ப சொத்தாக்கும் முயற்சி நான் உயிரோடு இருக்கும் வரை நடக்காது. அதுமட்டுமல்லாமல் மகாராணி போல் இருந்த சசிகலாவை சிறையில் தள்ளி அரசியல் அனாதையாக்கியவர் ஓபிஎஸ் தான் என்றும், ஓபிஎஸ்-ஐ முதல்வர் பதவிக்கு உயர்த்திய அண்ணன் டிடிவி தினகரனை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தியவர் ஓபிஎஸ் தான் என்று விமர்சித்துள்ளார். மேலும், அரசியல் அடையாளம் இல்லாமல் இருந்த ஓபிஎஸ்-ஐ அழைத்து துணை முதல்வராக்கியவர் எடப்பாடி பழனிசாமி என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications