என்னதான் நடக்கும் நடக்கட்டுமே! திடீர் தில்! வருமான வரித்துறைக்கு எதிராக வரிந்துகட்டும் விஜயபாஸ்கர்!
சென்னை: பொறுத்தது போதும் பொங்கி எழு என்ற கதையாக இதுவரை பொறுமை காத்து வந்த மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் இப்போது வருமான வரித்துறைக்கு எதிராக பொங்கி எழுந்திருக்கிறார்.
நீயா? நானா? என ஒரு கை பார்த்துவிடலாம் என்கிற அளவுக்கு அவருக்கு வந்த திடீர் துணிச்சலால் வருமான வரித்துறையை நீதிமன்றம் வரை இழுத்து விட்டுள்ளார்.
விஜயபாஸ்கரை பொறுத்தவரை பல பேட்டிகளில் தனக்கு மடியில் கணமில்லாததால் வழியில் பயமில்லை எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
குட்கா ஊழல்: அதிமுக மாஜி அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா உட்பட 21 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
விஜயபாஸ்கர்
அதிமுக ஆட்சிக் காலத்தில் நாள் தவறாமல் செய்திகளில் இடம்பிடித்து வந்தவர் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அதுவும் குறிப்பாக கொரோனா காலக் கட்டத்தில் விஜயபாஸ்கர் தினமும் மாலை 6 மணிக்கு அளிக்கும் பேட்டிக்காக ஒட்டுமொத்த தமிழக மக்களும் தொலைக்காட்சி முன் காத்திருந்தார்கள். இப்படி ஒரு காலத்தில் ஆஹா ஓஹோவென கொடிகட்டி பறந்த விஜயபாஸ்கர் திமுக ஆட்சிக்கு வந்தது முதலே இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போனார்.
நீதிமன்றத்தில் மனு
பொதுவெளிகளில் பேசுவது, பேட்டிகள் கொடுப்பது, அதிமுக உட்கட்சி விவகாரம் பற்றி பேசுவது என எதிலுமே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைகாட்டாமல் இருந்து வருகிறார். தான் உண்டு தன் மாவட்ட கட்சிப் பணி உண்டு என்று இருந்து வரும் இவர், இப்போது வருமான வரித்துறைக்கு எதிராக கம்பு சுற்ற ஆரம்பித்துள்ளார். தனது தொகுதி மேம்பாட்டு நிதி வங்கி கணக்கை வருமான வரித்துறை முடக்கியிருப்பது எந்த வகையிலும் நியாயமில்லை எனக் கூறி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பொறுத்தது போதும்
வருமான வரித்துறையினர் இன்னும் பல கோடி ரூபாய் மதிப்புடைய விஜயபாஸ்கரின் சொத்துக்களை முடக்கி வைத்துள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற படி ஏறியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். இதன் பின்னணியில் பல்வேறு அரசியல் காரணங்களும் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் தான் இவர் இவ்வளவு துணிச்சலாக வருமான வரித்துறையை நீதிமன்றத்துக்கு இழுத்து விட்டிருக்கிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
டெல்லி பயணம்
அண்மையில் விஜயபாஸ்கர் டெல்லி சென்று திரும்பிய நிலையில் நீதிமன்றத்தில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கெஞ்சியும் வேலை நடக்காததால் இனி மிஞ்சி பார்ப்பது என விஜயபாஸ்கர் முடிவெடுத்துவிட்டாரோ என்ற பேச்சும் ஓடிக்கொண்டிருக்கிறது.