அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், அதிமுகவில் நிலவும் உட்கட்சி குழப்பம் தற்போது புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது. குறிப்பாக அதிமுகவில் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஆளும் தரப்பு தீவிரமாக இறங்கியிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், அதிமுகவை உடைக்கும் அசைன்மென்டை விஜய், ஆதவ் அர்ஜுன - லீமா ரோஸ் மூலமே மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ஆட்சியில் இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு அரசை நடத்தி வந்தாலும், எதிர்காலத்தில் எந்தவித அரசியல் சிக்கலும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதனால் சட்டசபையில் தனிப்பெரும்பான்மை பெறும் நோக்கில் அதிமுகவின் பலவீனமான பகுதிகளை குறிவைத்து நகர்வுகள் தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவில் அதிருப்தியில் இருந்த சில எம்.எல்.ஏ.க்கள் அண்மையில் ஆளும் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

AIADMK Vijay TVK Adhav Arjuna

லீமா ரோஸ்

இந்த முயற்சியில் லாட்டரி அதிபர் மார்டினின் மனைவியும் எம்.எல்.ஏ.வுமான லீமா ரோஸூம் மற்றும் தவெக தரப்பில் ஆதவ் அர்ஜுனா முக்கிய பங்கு வகித்ததாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும், ஆரம்பத்தில் பேசப்பட்டபடி அமைச்சரவை வாய்ப்பு அல்லது முக்கிய பொறுப்புகள் கிடைக்காததால், அதிருப்தி அணியினர் மீண்டும் அதிமுக தலைமையுடன் சமரசம் பேச முயன்றதாக தெரிகிறது. இதற்காக எடப்பாடி பழனிசாமியிடம் தூதுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக உட்கட்சி மோதல்

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கை எளிமையானதாக இருந்தது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும், கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் சபாநாயகரிடம் கொடுக்கப்பட்ட புகாரை வாபஸ் பெற வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சில கடுமையான நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சி.வி. சண்முகம்

குறிப்பாக மன்னிப்பு கடிதம் வழங்க வேண்டும், முன்னாள் மாவட்டச் செயலாளர்களுக்கு மீண்டும் அதே பொறுப்பு வழங்கப்படாது, பொதுச்செயலாளர் தலைமையை ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும் என நிபந்தனைகள் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு சில முக்கிய நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக மாவட்ட அரசியலில் தங்களின் செல்வாக்கு குறையும் என்ற அச்சம் காரணமாக சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது.

அதிமுகவினர் போர்க் கொடி

அதே நேரத்தில் அதிமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்களாக பொறுப்பேற்றவர்கள் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். "ஏற்கனவே நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கினால், கிளைச் செயலாளர் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை பலர் ராஜினாமா செய்ய நேரிடும்" என அவர்கள் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெக

இந்த சூழ்நிலையில், அதிமுகவுக்கு திரும்பினாலும் எதிர்காலத்தில் பெரிய அரசியல் வாய்ப்புகள் கிடைக்காது என்ற மனநிலைக்கு சில அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை பயன்படுத்திக்கொள்ள ஆளும் தரப்பும் திட்டமிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தால், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்ற ஆஃபர் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக சில அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கட்சியை விட்டு வெளியேறி தவெகவில் இணைந்ததாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா

இதனால் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் மத்தியில் குழப்பம் அதிகரித்துள்ளது. பல இடங்களில் அதிமுக நிர்வாகிகள் மாற்றுக் கட்சிகளை நோக்கி நகரத் தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவே "அதிமுகவுக்கு இலையுதிர் காலமா?" என்ற கேள்வியை அரசியல் அரங்கில் எழுப்பியுள்ளது. இதற்கிடையில் மேலும் 6 முதல் 13 எம்.எல்.ஏ.க்கள் வரை ராஜினாமா செய்ய வைக்கப்பட்டால், இடைத்தேர்தல் மூலம் தனிப்பெரும்பான்மையை உறுதி செய்யலாம் என்ற கணக்கில் ஆளும் தரப்பு செயல்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எடப்பாடி பழனிசாமி

இதற்காக பல்வேறு தொகுதிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. மறுபுறம், இந்த விவகாரத்தை கௌரவப் பிரச்சனையாக பார்க்கும் சி.வி. சண்முகம், தனது ஆதரவாளர்களுடன் தனித்த ஆலோசனைகளை நடத்தி வருவதாகவும், எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சமீபத்தில் பெரும்பாலான அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் ஒன்றிணையும் சூழல் உருவாகியுள்ளதால், கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டிருந்த புகாரை எடப்பாடி பழனிசாமி தரப்பு வாபஸ் பெற்றது.

ஜெயலலிதா

இதையடுத்து முக்கிய தலைவர்களிடையே சமரச பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் நிர்வாகி ஒருவர், "தேர்தலில் பின்னடைவு ஏற்படும் காலங்களில் இதுபோன்ற சிக்கல்கள் எந்தக் கட்சியிலும் ஏற்படுவது இயல்பானது. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்திலும் சிலர் கட்சியை விட்டு சென்றுள்ளனர். அதனால் அதிமுக பலவீனமடைந்து விடும் என்று கூற முடியாது" என தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் அதிருப்தி

அரசியல் வட்டாரங்களில் பரவும் தகவல்கள் எந்த அளவுக்கு உண்மையாக மாறும், அதிமுகவில் அதிருப்தி அணி மீண்டும் ஒன்றிணையுமா அல்லது புதிய அரசியல் திருப்பம் ஏற்படுமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+