பாஜக ஒரு குழந்தை.. போட்டிக்கு வர்ற கட்சியைத்தான் விமர்சிக்க முடியும்.. கேபி முனுசாமி சொன்ன விளக்கம்!
சென்னை: பாஜகவை விமர்சிக்காமல் திமுகவை மட்டும் அதிமுக விமர்சிக்கிறது என முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டி வரும் நிலையில், அதற்குரிய காரணத்தை கூறியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி.
லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின், தனது பிரச்சாரத்தின்போது, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளை கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார்.

குறிப்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவையும் பிரதமர் மோடியையும் விமர்சிப்பதே இல்லை என்றும், இன்னும் மறைமுக கூட்டணி தொடர்கிறது, தேர்தலுக்காக கூட்டணியில் இருந்து விலகியுள்ளது போல நாடகம் போடுகிறார்கள் என்றும் விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக துணை பொதுச் செயலாளருமான கே.பி.முனுசாமி, ஸ்டாலினின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ளார். கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷை ஆதரித்து, கிருஷ்ணகிரி நகரில் பிரச்சாரம் மேற்கொண்டார் கே.பி.முனுசாமி.
அப்போது கேபி முனுசாமி பேசுகையில், "ஓட்டப் பந்தயத்தில் முன்னணியில் செல்பவர்கள் அடுத்ததாக யார் வருகிறார்கள் என்பதை தான் பார்ப்பார்கள். அவரை தோற்கடிக்க வேண்டும் என்கிற சிந்தனையில்தான் ஓடிக்கொண்டிருப்பார்கள்.
தற்போதைய தேர்தல் களம் என்கிற ஓட்டப் பந்தயத்தில் அதிமுக முன்னணியில் ஓடிக்கொண்டிருக்கிறது. எங்கள் பின்னால் திமுக ஓடி வந்து கொண்டிருக்கிறது. அதனால், திமுகவை பற்றித்தான் பேசி வாக்கு சேகரிப்போம். வெற்றிப் பாதைக்கு வர முடியாமல் கடைசி இடத்தில் இருப்பவர்களை பற்றி பேசுவதற்கு என்ன இருக்கிறது? அந்தக் கடைசி இடத்தில்தான் பாஜக உள்ளது.
களத்தில் போட்டிக்கு வருபவர்களை பற்றித்தான் பேச முடியும். பாஜகவை சரியான நேரத்தில் விமர்சிப்போம். இதுகுறித்து ஸ்டாலின் கவலைப்பட வேண்டியதில்லை. தேசிய அளவில் பாஜக பெரிய ஆளாக இருந்தாலும், தமிழகத்தை பொறுத்தவரை பாஜக ஒரு தவழுகின்ற குழந்தை. அதை விமர்சிக்கவில்லை என்பது பற்றி குறை சொல்லக்கூடாது." எனக் கூறியுள்ளார்.
மேலும் பேசிய கேபி முனுசாமி, "தமிழக மக்களிடம் உங்களுடைய எந்த விதமான சித்து விளையாட்டுகளும் எடுபடாது. எம்ஜிஆர், ஜெயலலிதாவை குறித்து பிரதமர் மோடி பேசுவது, எங்கள் தலைவர்களை உண்மையாக நேசித்து கூறவில்லை. தமிழக மக்கள், எம்ஜிஆர் மீதும், ஜெயலலிதா மீதும் ஈடில்லா அன்பு கொண்டிருப்பதால், அந்த அன்பு உள்ளங்கள் மாறி நமக்கு வாக்களிக்க மாட்டார்களா என்ற சுயநலத்தோடுதான் மோடி இப்படி பேசி வருகிறார்" என விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications