டைமிங்கில் களமிறங்கிய அதிமுக டீம்.. செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்யுங்க.. ஆளுநரிடம் பரபர கோரிக்கை!
சென்னை: செந்தில்பாலாஜி கைது நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பி இருக்கும் சூழலில் அதிமுக மூத்த நிர்வாகிகள் ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து முக்கிய கோரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது, நெஞ்சு வலியால் கதறிய அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆஞ்சியோ செய்து பார்த்ததில் அவரது இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் 3 அடைப்பு இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து, செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவக் குழுவினர் பரிந்துரைத்தனர். இதையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி நேற்று மருத்துவமனைக்குச் சென்று செந்தில்பாலாஜியை சந்தித்த பின்னர், வரும் 28ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. ஏற்கெனவே நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுவிட்டதால் அதை ரத்து செய்ய முடியாது எனக் கூறி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி வசம் இருந்த இலாகாக்களை 2 அமைச்சர்களுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்ய முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளார். மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துச்சாமிக்கும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட உள்ளது. அதேசமயம், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடரவுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை, அதிமுக மூத்த நிர்வாகிகள் இன்று ஆளுநரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து திமுக அரசுக்கு எதிராக அதிமுக நிர்வாகிகள் மனு அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், விஷயபாஸ்கர், பெஞ்சமின் உள்ளிட்டோர் ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் ரவியைச் சந்தித்தனர். செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு ஆளுநரிடம் அதிமுக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 30 ஆயிரம் கோடிக்கு சொத்து சேர்த்ததாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்தும் விசாரணைக்கு உத்தரவிடுமாறும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பாகவும் ஆளுநரிடம் அதிமுகவினர் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சில வாரங்களுக்கு முன்னர், திமுக ஆட்சியின் பல்வேறு முறைகேடுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேரணியாகச் சென்று ஆளுநரிடம் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications