அடுத்தடுத்த ரெய்டு.. சட்ட போராட்டத்திற்கு ரெடியான அதிமுக..உருவாக்கப்பட்ட 6 பேர் அடங்கிய சட்டக்குழு!
சென்னை: அதிமுக மாஜி அமைச்சர்கள், நிர்வாகிகள் அடுத்தடுத்து ரெய்டுகளில் சிக்கி வரும் நிலையில் அதிமுக சார்பாக சட்ட ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்பட்டு, அதற்காக இன்று உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று முதல்நாள் தீவிரமாக லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ரெய்டை தொடர்ந்து எஸ்.பி வேலுமணி மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் உட்பட 17 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இன்று எஸ்.பி வேலுமணியின் வங்கி கணக்கும் முடக்கப்பட்டது.
தொடர்ந்து இவர் மீதான விசாரணை தீவிரமாக நடந்து வருவதால் விரைவில் இவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இவர் கைது செய்யப்படவும் கூட வாய்ப்புகள் உள்ளதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மாஜி அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இதேபோல் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வழக்கு பதிவு செய்தது.

பல்வேறு ரெய்டு
இந்த ரெய்டுகள் வெறும் தொடக்கம்தான். இனிமேல்தான் பல்வேறு ரெய்டுகள் நடக்கும், வழக்குகள் பதியப்படும், கைதுகள் அரங்கேறும் என்று தகவல்கள் வருகின்றன. முக்கியமாக முன்னாள் அமைச்சர்கள் பலர் இனி குறி வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு நடத்தியதும் இது தொடர்பான விவாதங்களை அதிகரித்துள்ளது.

ஆலோசனை
இந்த நிலையில்தான் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக நடத்தப்படும் லஞ்ச ஒழிப்பு சோதனைகள் குறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. தொடர் ரெய்டுகளுக்கு அதிமுக தரப்பில் எப்படி எதிர்வினையாற்றுவது, இது தொடர்பாக சட்ட ரீதியான போராட்டங்களை எப்படி எதிர்கொள்வது, ஆளும் கட்சியின் நடவடிக்கைகளை எப்படி சமாளிப்பது என்று பல்வேறு விஷயங்கள் இதில் ஆலோசிக்கப்பட்டது.

வழக்கு
முக்கியமாக ஆளும் தரப்பு போடும் வழக்குகளை எப்படி எதிர்கொள்வது, சட்ட ரீதியாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று ஆலோசனை செய்யப்பட்டது. இந்த ஆலோசனை நேற்று நடந்த நிலையில் இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் நிர்வாகிகள் மீது, ஆளும் கட்சியின் தூண்டுதலால் பல்வேறு பொய் வழக்குகள் பதியப்பட்டும் வருகிறது. நாளுக்கு நாள் பொய் வழக்குகள் புனையப்படுவது அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

குழு நியமனம்
கழக பணியிலும், மக்கள் பணியிலும் பாடுபடும் நிர்வாகிகள் அனைவருக்கும் கட்சி எப்போதும் உடன் இருக்கும், அரணாக இருந்து பாதுகாக்கும் என்பதை கட்சி தலைமை தெரிவித்துக்கொள்கிறது. அரசியல் காழ்புணர்ச்சியாலும், திமுகவினரின் தூண்டுதலால் கழகத்தினர் மீது போடப்படும் வழக்குகளை எதிர்கொள்ள அதிமுக சார்பாக "கழக சட்ட ஆலோசனை குழு" என்ற குழுவை அமைத்து இருக்கிறோம், என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கை
இந்த அறிக்கையின்படி முன்னாள் அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், சி.வி சண்முகம் மற்றும் அதிமுக அமைப்பு செயலாளர் தளவாய் சுந்தரம், அதிமுக வழிகாட்டு குழு உறுப்பினர் மனோஜ் பாண்டியன், அதிமுக தேர்தல் பிரிவு துணை செயலாளர் இன்பத்துரை, அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாபுமுருகவேல் ஆகிய 6 பேர் சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இனி வரும் வழக்குகளை எதிர்கொள்ளும் வகையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
Recommended Video

முக்கியம்
இவர்கள் 6 பேருமே சட்டம் படித்தவர்கள். அதோடு அதிமுகவில் முக்கிய பொறுப்புகளை வகிப்பவர்கள். அதிமுக எம்எல்ஏக்கள், மாஜி அமைச்சர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதியப்படலாம், நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று தகவல்கள் வரும் நிலையில் இந்த சட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியாக வழக்குகளை, நடவடிக்கைகளை எதிர்கொள்ள அதிமுக தயாராகிவிட்டது என்பதையே இது காட்டுகிறது.












Click it and Unblock the Notifications