அதிமுக பொதுக்குழு வழக்கு: ‘நாளைக்குள் தாக்கல்’ நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு.. தீர்ப்பு ஒத்திவைப்பு!
சென்னை : பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்த நிலையில், விசாரணை முடிந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்டவில்லை என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது தவறானது. ஓபிஎஸ் என்ற தனி நபர் பயனடையும் வகையில் தனி நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். ஒன்றரை கோடி தொண்டர்கள் பயனடையும் வகையில் அல்ல என ஈபிஎஸ் தரப்பு வாதங்களை முன்வைத்தது.
அதிமுகவின் விதிகளின்படி தான் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழுதான் உச்ச அதிகாரம் பெற்ற அமைப்பு. அதில் எடுக்கும் முடிவே அதிமுக கட்சியில் இறுதியானது. கட்சி விதிகளை புறக்கணித்து தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார் என ஈபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
ஓபிஎஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், அடிப்படை உறுப்பினர்களை விட பொதுக்குழு உறுப்பினர்களே மேலானவர்கள் என்ற வாதத்தை ஏற்க முடியாது. அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கும் ஒரே கட்சி அதிமுக தான் என வாதங்களை எடுத்து வைத்தார்.

மேல்முறையீட்டு மனு விசாரணை
அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23க்கு முன்னர் இருந்த நிலையே அதிமுகவில் நீடிக்கும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அனைத்து தரப்பினரும் தலா ஒரு மணி நேரம் வாதம் செய்ய அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

ஈபிஎஸ் தரப்பு வாதம்
எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், அரிமா சுந்தரம் மற்றும் விஜய் நாராயண் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அவர்கள் தங்கள் வாதத்தில், தனி நீதிபதியின் தீர்ப்பில் பல்வேறு தவறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டினர். குறிப்பாக, ஜூலை 11 பொதுக்குழுவுக்கு ஜூலை 1ல் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்டவில்லை என்றும் தனி நீதிபதி கூறியுள்ளது தவறு எனத் தெரிவித்தனர்.

நிவாரணம் கோராத நிலையில்
ஒன்றரை கோடி உறுப்பினர்களின் எண்ணத்தை 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது யூகத்தின் அடிப்படையிலானது எனவும், ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்படாத நிலையில், அந்த நிவாரணத்தை தனி நீதிபதி வழங்கியது அசாதாரணமானது எனத் தெரிவித்தனர்.

பொதுக்குழுவே அதிகாரம் மிக்கது
கட்சி விவகாரங்களை பொறுத்தவரை பொதுக்குழு முடிவே இறுதியானது. அடிப்படை தொண்டர்களின் கருத்துக்களை பெறவில்லை என்ற தனி நீதிபதி தீர்ப்பளித்தது தவறு எனவும் சுட்டிக்காட்டினர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட வேண்டும் என தனி நீதிபதி தீர்ப்பளித்தைச் சுட்டிக்காட்டிய ஈபிஎஸ் தரப்பு இருவரும் இணைந்து செயல்பட முன்வர மாட்டார்கள் எனவும், தனி நீதிபதி உத்தரவு காரணமாக கட்சி நடவடிக்கைகள் செயல்படாமல் முடங்கியுள்ளதாக தெரிவித்தனர்.

ஓபிஎஸ் வாதம்
அதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், "அடிப்படை உறுப்பினர்களை விட பொதுக்குழு உறுப்பினர்களே மேலானவர்கள் என்ற வாதத்தை ஏற்க முடியாது. அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளரைத் தேர்வு செய்யும் ஒரே கட்சி அ.தி.மு.க தான். இது தொடர்பாக விதியைக் கொண்டு வருவதில் எம்.ஜி.ஆர். உறுதியாக இருந்தார்" என வாதிட்டார்.

வாதங்கள் நிறைவு
தலைமைப் பதவியை பொதுக்குழு அங்கீகரிக்க வேண்டும் என்ற வாதம் ஏற்புடையது அல்ல வாதங்களை முன்வைத்தது ஓபிஎஸ் தரப்பு. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வாதங்கள் நிறைவடைந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர்.

தாக்கல் செய்ய உத்தரவு
அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு, நாளைக்குள், அதாவது ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய அனைத்து தரப்புக்கும் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications