அதிமுக கூட்டணியில் யார்? எடப்பாடிக்கு அதிகாரம்.. இனி ஓபிஎஸ், டிடிவி தினகரன் நிலைமை கஷ்டம்தான்!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி குறித்து முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வரப்பட வாய்ப்பே இல்லை என்று பார்க்கப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் அக்கட்சி தொண்டர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஏனென்றால் அண்மையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்திருந்தார். அதன்பின் மீண்டும் என்டிஏ கூட்டணி மற்றும் அதிமுக ஒன்றிணைப்பு தொடர்பாக ஓபிஎஸ் பேச தொடங்கினார்.

இதனால் அமித்ஷா தரப்பில் ஓபிஎஸ்க்கு சில உறுதிமொழி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. அதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அண்ணாமலை சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார். இந்த சந்திப்புக்கு பின் அண்ணாமலை நேரடியாக டெல்லியில் முகாமிட்டார். திருப்பரங்குன்றம் பிரச்சனையின் போது கூட அண்ணாமலை டெல்லியில் தான் இருந்தார்.
இதனால் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் தரப்பை எப்படியாவது என்டிஏ கூட்டணிக்குள் வர சம்மதம் பெற வேண்டும் என்று பாஜக முயன்றதாக தெரிகிறது. இதன்பின் எடப்பாடி பழனிசாமியுடன் அமித்ஷா ஆலோசித்ததாகவும் சொல்லப்பட்டது. அதற்கேற்ப அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடந்த 2 நாட்களாக எடப்பாடி பழனிசாமியை விமர்சிப்பதை தவிர்த்து வந்தார்.
ஓபிஎஸ் தரப்பும் ஜெயலலிதா பிறந்தநாளுக்கு பின் அமைதியாகியது. யாரையும் விமர்சிக்காமல் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று மட்டுமே கூறி வந்தது. இதனால் அதிமுக பொதுக்குழுவில் பிரிந்தவர்களை மீண்டும் இணைப்பது தொடர்பாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வளர்மதி தொடங்கி எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், கேபி முனுசாமி உள்ளிட்ட பலரும் துரோகிகளுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அதுமட்டுமல்லாமல் சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி குறித்து முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அதேபோல் கூட்டணிக்கு அதிமுகவே தலைமை என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் காரணமாக அதிமுகவில் மீண்டும் இணைவதற்கோ, அதிமுகவில் சேர்க்கப்படவோ ஓபிஎஸ் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோருக்கு வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.
ஏனென்றால் எடப்பாடி பழனிசாமி தொடக்கம் முதலே இவர்களை சேர்க்க கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். தற்போது பொதுக்குழுவும் எடப்பாடி பழனிசாமியுடன் இருப்பதால், அதிமுக ஒன்றிணைவது தொடர்பான பேச்சிற்கே இடமில்லை என்று கருதப்படுகிறது. இதனால் என்டிஏ கூட்டணியின் கதவுகளை இருவருக்கும் அடைக்கப்பட்டுவிட்டதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications