தன் சட்டையை தானே கிழிப்பது போல்.. முக்கி முனகி 3 பக்கம் பதில்.. ரகுபதியை விளாசிய எடப்பாடி
சென்னை: தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் பெருகி இருப்பதற்கு அண்டை மாநிலங்களில் இருந்து எரிசாராயம் கடத்தி கொண்டு வரப்படுவதுதான் காரணம் என்று தமிழக மக்களின் விதிவசத்தால் சட்ட அமைச்சராக வலம் வரும் ரகுபதி வாக்குமூலம் அளித்திருப்பது வெட்கக்கேடானது என்று எடப்பாடி பழனிசாமி காட்டமாக கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் அரசூர் அருகே கள்ளச்சாராயம் குடித்த ஒருவர் பலியானதாக தகவல் பரவியது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இச்சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டு ஆளும் திமுக அரசை விமர்சித்திருந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணமும், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரமும் கண்ட பிறகும் எந்த பாடமும் நீங்கள் கற்றுக்கொள்ளவில்லையா ஸ்டாலின் அவர்களே? உங்கள் விடியா அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழிப்பதற்குள் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோவது? எனக் கேள்வி எழுப்பி இருந்தார் எடப்பாடி பழனிசாமி.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்து இருந்தார். இதுதொடர்பாக ரகுபதி கூறுகையில், “விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தி மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் உயிரிழந்ததாக செய்திகள் வருகின்றன என்று எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமி இச்சம்பவம் குறித்த முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளாமல் அவசர கதியில் வழக்கம்போல ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜெயராமன் என்பவர் அதிக அளவு மதுப்பழக்கம் உள்ளவர் என்றும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூலை 4) உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார் என்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆனால் இதனை சரிபார்க்காமல், இச்சம்பவத்தை கள்ளச் சாரய மரணம் என்று கூறி இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்" என்று சாடியிருந்தார்.
இந்த நிலையில், ரகுபதியின் அறிக்கைக்கு பதிலளித்துள்ள எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் பெருகி இருப்பதற்கு அண்டை மாநிலங்களில் இருந்து எரிசாராயம் கடத்தி கொண்டு வரப்படுவதுதான் காரணம் என்று தமிழக மக்களின் விதிவசத்தால் சட்ட மந்திரியாக வலம் வரும் திரு. ரகுபதி வாக்குமூலம் அளித்திருப்பது வெட்கக்கேடானது.
அண்டை மாநிலங்களான புதுச்சேரி மற்றும் ஆந்திரா-விலிருந்து எரிசாராயமோ, சாராயமோ, கள்ளச்சாராயமோ தமிழகத்திற்கு கடத்திக் கொண்டு வரப்படுகிறது என்றால், அதை தடுக்காமல் இந்த விடியா திமுக ஆட்சியின் காவல்துறையினர் சோதனைச்சாவடிகளில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? அவர்களின் கைகளை கட்டிப்போட்டது யார்?
ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே இந்த கடத்தலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுவதில் நியாயமிருப்பதாக தெரிகிறது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் கள்ளச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்ட மூவரில் ஒருவர் மரணம் அடைந்தது குறித்த எனது கருத்துக்கு முக்கி முனகி மூன்று பக்கம் பதிலளித்துள்ள சட்ட மந்திரி, புதுச்சேரியிலிருந்து சாராயத்தை கடத்தி வந்து அருந்தியதால் ஏற்பட்ட மரணம் என்று வாக்குமூலம் அளித்திருப்பது, 'தன் சட்டையை தானே கிழிப்பது போல்', காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சரின் துறையை குறை கூறியிருப்பது நகைச்சுவையானது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications