மதுவை விட லாட்டரி மோசம்..லாட்டரி பணம் 500 கோடி ஓகேவா சார்? திமுக எம்எல்ஏவின் போஸ்ட்..அதிமுக அட்டாக்
சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பேசியது தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் "கருத்தியல் தலைவர்னா மக்களுக்காக களத்தில் நிற்பவர்கள்தான்" "மதுவை விட மோசமானது லாட்டரி" என மறைமுகமாக விமர்சித்து இருந்தார் திமுக எம்எல்ஏவான ஐபி செந்தில் குமார். இந்த நிலையில் லாட்டரி மோசமானது என்றால் அதிலிருந்து வரும் பணம் மட்டும் நல்லதா என விமர்சித்து வருகின்றனர் அதிமுகவினர்.
இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சரும் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவருமான அண்ணல் அம்பேத்கரின் குறித்த தகவல்கள் இடம்பெற்ற எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் விகடன் குழும நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அம்பேத்கரின் பேரனான ஆனந்த் டெல்டுண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் விஜய். தொடர்ந்து நூலை உருவாக்கியவரும், வாய்ஸ் ஆப் காமன் நிறுவனத்தின் நிறுவனருமான ஆதவ் அர்ஜுனா பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர்," தமிழகத்தில் புதிய கருத்தியல் தலைவராக விஜய் உருவெடுத்து இருக்கிறார். புதிய வரலாற்றை உருவாக்கும் மேடையாக இந்த மேடை உருவாகி இருக்கிறது. பட்டியலினத்தை சாராத ஒருவர் அம்பேத்கரின் புத்தகத்தை வெளியிட வேண்டும் என்பது திருமாவளவனின் கனவு விஜய் இந்த புத்தகத்தை வெளியிடுவதன் மூலம் அது கனவு நினைவாகி இருக்கிறது. பிறப்பால் முதலமைச்சராக ஒருவர் உருவாக்கப்பட கூடாது .எல்லோரும் சமம் என்று சொல்வதுதான் திராவிடம். வேறு ஒன்றும் இல்லை" என பேசினார்.
ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு திமுக தலைமை மற்றும் அவர் சார்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளையே கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் திரைத்துறை சார்ந்தும் அரசியல் சார்ந்தும் நேரடியாகவே திமுக தலைமையையும், முதல்வரின் குடும்பத்தினரையும் விமர்சித்ததாக திமுகவினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனாவை மறைமுகமாக விமர்சித்து இருந்தார் திமுக துணை பொது செயலாளரும், அமைச்சருமான ஐ.பெரியசாமியின் மகனான ஐபிஎல் செந்தில்குமார். இவர் திமுக மாவட்ட செயலாளராகவும் பழனி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாகவும் இருக்கிறார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்த அவர் "கருத்தியல் தலைவர்னா, களத்தில் மக்களுக்காக நிற்பவர்" எனவும், "மதுவை விட மோசமானது லாட்டரி" என குறிப்பிட்டு இருந்தார்.

அதாவது ஆதவ் அர்ஜுனாவில் மாமாவான லாட்டரி அதிபர் மார்ட்டின் லாட்டரி தொழில் செய்து வருகிறார் எனவும், அதில் கிடைத்த பணத்தை வைத்து ஆதவ் அர்ஜுனா அரசியல் செய்து வருவதாக மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் லாட்டரி மோசம் என்றால் அதிலிருந்து வரும் பணம் நல்லதா என ஐபி செந்தில் குமாருக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர் அதிமுகவினர். இதுத்தொடர்பாக அவரது போஸ்ட்டில் ஏகப்பட்ட கமெண்ட்கள் அதை பற்றியே இருக்கிறது. அதாவது லாட்டரி அதிபர் மார்ட்டினிற்கு சொந்தமான ஃபியூச்சர் கேமிங் நிறுவனம் திமுகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் 509 கோடி பணத்தை வழங்கியிருந்தது. அதனைக் குறிப்பிட்டு இந்த கேள்வியை எழுப்பிகின்றனர் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications