எடப்பாடி செய்த அந்த 3 தவறுகள்.. "முக்குலத்தோர் கோபம்.." உடைத்து சிதற போகுது கட்சி? அடுத்து என்ன
சென்னை: எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற இருபெரும் 'மாஸ்' ஆளுமைகள், மக்கள் செல்வாக்கு காரணமாகப் பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டை ஆண்ட அதிமுக, 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மிகப் பெரிய உள்கட்சிப் பூசலை சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் இதுபோன்ற பூசல் ஏற்பட்டு இருந்தாலும் கூட, இந்த முறை பிரச்சனை அவ்வளவு சீக்கிரம் முடிந்துவிடாது.
2016ல் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, சசிகலாவால் முதலமைச்சர் நாற்காலியில் அமர வைக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, பின்னர் ஓபிஎஸ்-ஸுடன் கைகோர்த்துச் சசிகலாவையே கட்சியிலிருந்து கட்டம் கட்டினார். அதன் பிறகு கட்சியைத் தனது ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டு வந்த ஈபிஎஸ், அடுத்தடுத்து எடுத்த பல அதிரடி முடிவுகள், இன்று அதிமுகவை 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் அமர வைக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது.

அதிமுக
முதல் தவறு.. அதிமுகவின் உருவாக்கக் காலத்திலிருந்தே தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் சமூகம் அக்கட்சியின் அசைக்க முடியாத இரும்புக்கோட்டையாக விளங்கியது. ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என அந்தச் சமூகத்தின் முக்கிய முகங்களை எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்துக் கட்சியை விட்டு நீக்கியது தென் மண்டலத்தில் மிகப் பெரிய விரிசலை ஏற்படுத்தியது.
கட்சியின் அதிகாரம் தென் மாவட்டங்களிலிருந்து மாறி, ஈபிஎஸின் சொந்தச் சமூகமான கொங்கு மண்டலக் கவுண்டர் சமூகத் தலைவர்களின் கைகளுக்கு மாறியது. தொடர் தோல்விகளுக்குப் பிறகும், பதவி இல்லாமல் சாதாரணத் தொண்டர்களாகக் கூட ஓபிஎஸ், சசிகலாவை மீண்டும் சேர்க்க ஈபிஎஸ் மறுத்ததால், தென் மாவட்ட வாக்குகள் அடியோடு சிதறின. இதன் விளைவாக, அதிமுக தனது வரலாற்றிலேயே முதன்முறையாகத் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியைப் பிடிக்க முடியாமல் தவிக்கிறது.
பாஜக
இரண்டாவது தவறு... ஜெயலலிதா தனது இறுதிக் காலத்தில் பாஜகவை தள்ளி வைத்தே அரசியல் செய்தார். ஆனால், ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு நடந்த 4 தேர்தல்களில் 3 முறை பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார் எடப்பாடி! தமிழ்நாட்டில் நிலவும் திராவிட அரசியல் சூழலில், பாஜகவுடன் வைத்த இந்தத் தொடர் கூட்டணி, அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியான சிறுபான்மையின வாக்குகளை அடியோடு துடைத்து எறிந்தது. கட்சி முற்றிலும் டெல்லியை நம்பியிருக்கிறது என்ற பிம்பம் வாக்காளர்களையும் வெறுப்படைய வைத்தது.
மூன்றாவதாக தேர்தலுக்கு முன்பாக தவெக தலைவர் விஜய், அதிமுகவை நேரடியாகத் தாக்குவதைத் தவிர்த்து வந்தார். இதனால் தவெக - அதிமுக கூட்டணி அமையலாம் என அரசியல் வட்டாரங்கள் பெரிதும் எதிர்பார்த்தன. ஆனால் எடப்பாடி மீண்டும் பாஜக பக்கமே சாய்ந்தார். அதிமுகவை நேரடியாகப் பெயர் குறிப்பிட்டு விமர்சிப்பதைக் கூட தவிர்த்த விஜய், "மற்றும் பலர்" என்றே அதிமுகவை விமர்சித்தார்.
ஏற்க மறுப்பு
தேர்தல் முடிவுகளில் விஜய் 108 இடங்களைப் பிடித்துத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பிறகும், அதிமுகவிற்கு ஒரு பவர் ஷேரிங் வாய்ப்பு கிடைத்தது. விஜய்யின் தவெகவுக்கு ஆதரவு தந்து கூட்டணியில் அமரலாம் எனப் பல அதிமுக எம்எல்ஏக்கள் விரும்பினர். ஆனால், எடப்பாடியோ பரம எதிரியான திமுகவிடம் வெளியிலிருந்து ஆதரவு பெற்று ஒரு திராவிடக் கூட்டணியை அமைக்க முயன்றார். அந்த பிளான் டோட்டலாக ஃப்ளாப் ஆக, அதற்குள் விஜய் காங்கிரஸ், விசிக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளுடன் கைகோர்த்து ஆட்சியை அமைத்தார்.
"கடைக்கோடி தொண்டனும் கட்சியின் உச்சப் பதவிக்கு வரலாம்" என்ற எம்ஜிஆரின் அடிப்படை விதியை, ஓபிஎஸ் மற்றும் சசிகலா மீண்டும் உள்ளே வராதவாறு ஈபிஎஸ் சட்டவிதிகள் மூலம் மாற்றியமைத்தார். தொடர் தோல்விகள் கிடைத்தாலும், அனைத்து அதிகாரங்களையும் தனக்குள்ளேயே குவித்துக்கொண்டது கட்சியின் ஜனநாயகத் தன்மையைக் குலைத்துவிட்டது என்ற விமர்சனம் வலுத்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி
தவெக அரசுக்கு எதிராகச் சட்டசபையில் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது, அதிமுகவின் 47 எம்எல்ஏக்களில் 25 பேர் எடப்பாடியின் உத்தரவை மீறி விஜய்யின் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். பொதுவாக இதுபோல கொறடா உத்தரவை மீறி வாக்களித்தால் எம்எல்ஏ பதவியைப் பறிக்கலாம். ஆனால், அவர்கள் கட்சி பதவியை மட்டுமே எடப்பாடி பறித்தார். அவர்களை நீக்கக் கூட எடப்பாடி ரெடியாக இல்லை.
எம்ஜிஆராலும் ஜெயலலிதாவாலும் வளர்க்கப்பட்ட ஒரு மாபெரும் இயக்கம், எடப்பாடியின் தவறான நகர்வுகளால் தனது முகவரியைத் தொலைத்துக் கொண்டிருக்கிறதா என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications