சிஏஏ: உங்களுக்கு தைரியம் இல்லை.. போயிட்டு வாங்க.. அதிமுகவை கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: சிஏஏ தீர்மானத்தை எதிர்க்க அதிமுகவிற்கு தைரியம் கிடையாது என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
சி.ஏ.ஏ சட்டத்தை ரத்துச் செய்யக்கோரி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று தீர்மானம் கொண்டு வந்தார். சிஏஏ சட்டத்திற்கு எதிர்க்கட்சியாக இருந்த போதே திமுக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனால் அதிமுக இந்த சட்டத் திருத்தத்தை தொடர்ந்து ஆதரித்து வந்தது.
பாஜக ஆளாத பல்வேறு மாநிலங்களில் இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் திமுக தரப்பு கோரிக்கை வைத்தும் அப்போதைய ஆளும் கட்சியான அதிமுக சிஏஏவிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவில்லை. அதோடு இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு நலன் பயக்கும் என்றும் அதிமுக வாதம் வைத்து வந்தது.

எதிர்ப்பு
இந்த நிலையில் இன்று தமிழ்நாடு சட்டசபையில் சி.ஏ.ஏ சட்டத்தை ரத்துச் செய்யக்கோரி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று தீர்மானம் கொண்டு வந்தார். ஆளும் திமுக இப்படி ஒரு தீர்மானத்தை கொண்டு வர போகிறது என்று இன்று அதிகாலையிலேயே செய்தி வெளியானது. திமுக இன்று தீர்மானத்தை நிறைவேற்றும் என்று கூறப்பட்டது போலவே முதல்வர் ஸ்டாலின் தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

அதிமுக
ஆனால் அதிமுக இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே சட்டசபையில் இருந்து வெளியேறியது. சட்டசபையில் பேச அனுமதி அளிக்கவில்லை என்று கூறி அதிமுக தரப்பு அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் குறித்து பேரவையில் கே.பி.முனுசாமி பேச முயற்சித்தார்; எங்களுக்கான உரிமை மறுக்கப்படுகிறது. தொடர்ந்து வலியுறுத்தியும் அனுமதி அளிக்கவில்லை, எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை. இதை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பிற்கு பின் பேசினார்.

முதல்வர்
அவையில் தீர்மானத்தை தாக்கல் செய்த பின் முதல்வர் ஸ்டாலின் இதை விமர்சித்து பேசினார். அதில், இந்த தீர்மானத்தை ஆதரிக்க.. எதிர்க்கட்சிகளுக்கு தைரியம் இல்லை. அதனால் வெளிநடப்பு செய்துள்ளார்கள் முதல் அமைச்சர். சி.ஏ.ஏ தீர்மானத்தை ஆதரிக்காமல் தவிர்க்கவே அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது, எங்கள் வாக்குறுதியில் நாங்கள் கூறியது போலவே தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். குடியுரிமை பெற மதம் அடிப்படை கிடையாது.

உணர்வு
மக்களாட்சி தத்துவத்தின் படி ஒரு நாட்டின் நிர்வாகம் என்பது அந்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் கருத்தினையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அனைத்து மக்களின் உணர்வுகளையும் உணர்ந்து அமைந்திருக்க வேண்டும். ஆனால் இந்த சட்டம் மக்களின் உரிமைக்கு எதிராக உள்ளது. மத ரீதியாக மக்கள் எந்த நாட்டிலிருந்து வருகிறார்கள், எந்த மத பின்னணியில் இருந்து வருகிறார்கள் என்பதைப் வைத்து பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் இந்த சட்டம் உள்ளதால் அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம், என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

சபாநாயகர்
அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் வெளிநடப்பு செய்யும் போது அதை சபாநாயகர் அப்பாவு அவர்களும் விமர்சனம் செய்தார். அதிமுக உறுப்பினர்கள் திட்டமிட்டு வெளிநடப்பு செய்கிறீர்கள். காரணமே இல்லாமல் வெளிநடப்பு செய்கிறார்கள். வெளிநடப்பு செய்வதற்கு வேறு நல்ல காரணங்களை கூறலாம். சரி போய் வாருங்கள் என்று கூறி சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்தார்.

சட்ட பின்னணி
மத்திய பாஜக அரசு மூலம் எதிர்ப்புகளுக்கு இடையில் இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் கொண்டு வரப்பட்டது. இது அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பருக்கு முன் இந்தியாவிற்குள் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறித்தவர்கள் ஆகிய மதச்சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் சட்டம் ஆகும். இஸ்லாமியர்கள் இதில் சேர்க்கப்படாததால் இந்தியாவில் இஸ்லாமியர்கள் இடையே இந்த சட்டம் பெரும் எதிர்ப்புகளை சந்தித்தது. சிஏஏ சட்டத்தோடு என்ஆர்சி சேர்ந்து நிறைவேற்றப்படும் பட்சத்தில் அது இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிராக செல்லலாம் என்ற அச்சம் நிலவியதால் டெல்லியில் இந்த சட்டத்திற்கு எதிராக பலர் போராடி வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications