அதிமுக வலுவிழந்து வருகிறது.. பாஜகவின் போக்கை கண்டுகொள்வதே இல்லை.. திருமாவளவன் குற்றச்சாட்டு!
சென்னை: அரசியல் ரீதியாக அதிமுக வலுவிழந்து விட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். தேசிய அளவில் பாஜகவின் மக்கள் விரோத போக்கை அதிமுக கண்டுகொள்வதில்லை என்று குற்றம்சாட்டியுள்ள திருமாவளவன், திமுக அரசை குற்றம் சொல்வதில் மட்டுமே குறியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், இம்முறை திமுக மற்றும் நாதக இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக உட்பட பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன. அதேபோல் அதிமுகவின் குறிக்கோள் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் என்றே பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ளது. பாஜக தரப்பில் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை நிறைவேற்ற தீவிரம் காட்டி வரும் நிலையில், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் அதிமுக தரப்பில் இதுவரை எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், வேங்கையவயல் கிராமத்தை காவல்துறையினர் தனித் தீவு போல் மாற்றியுள்ளனர். வக்ஃப் வாரிய மசோதாவை பொறுத்தவரை கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டது. ஆனால் ஆலோசனை கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களை பேச அனுமதிக்கவே இல்லை.
அந்த கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களை பலமுறை வெளியேற்றி இருக்கிறார்கள். மீண்டும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு பாஜக அரசு முயற்சிக்கிறது. அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான அரசு பாஜக அரசு என்பதை உறுதிபடுத்தும் வகையில் இந்த விவகாரத்தில் நடந்து கொள்கிறார்கள். இந்த போக்கை விசிக வன்மையாக கண்டிக்கிறது.
இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக வாய் திறக்கவே இல்லை. சிறிய பிரச்சனைகளை ஊதி பெருக்குகிறார்கள். எல்லாவற்றுக்கும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுவிட்டது என்று திமுக அரசை குற்றம் சாட்டுவதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். தேசிய அளவில் பாஜக அரசு வெகுமக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கண்டிப்பதே இல்லை.
அதிமுகவின் இந்த போக்கு அதிர்ச்சி அளிக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட போட்டியிடவில்லை என்பது அவர்கள் அரசியல் ரீதியாக எந்த அளவிற்கு வலுவிழந்து வருகிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது என்று விமர்சித்துள்ளார். அதிமுக ஏற்கனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலையும் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications