4 ஆக சிதறி.. "இந்த நிலைமைக்கு போய்விட்டதே".. அதிமுக ஆண்டுவிழாவில் கலங்கும் ரரக்கள்.. என்ன நடக்கிறது?
சென்னை: அதிமுகவில் இதற்கு முன் எந்த ஒரு ஆண்டு விழாவும் இவ்வளவு மோசமாக இருந்தது இல்லை. எம்ஜிஆர் இறந்த காலகட்டத்தில் சந்தித்த அளவை விட மிக மோசமான.. நீண்ட கோஷ்டி மோதலை அந்த கட்சி இந்த வருடம் சந்தித்து வருகிறது.
அதிமுக கட்சி 1972ம் வருடம் அக்டோபர் 17ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த கட்சியை எம்ஜிஆர் தொடங்கி 50 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த நிலையில்தான் 51ம் ஆண்டில் படியெடுத்து வைப்பதை முன்னிட்டு அதிமுக சார்பாக மாபெரும் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அதிமுக அலுவலகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செய்ய உள்ளனர். எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக இருப்பதால் இந்த விழாவை பெரிதாக கொண்டாட முடிவு செய்துள்ளார். தமிழ்நாடு முழுக்க இதற்காக பெரிய அளவில் விழா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
ஆனால் இதுவரை இல்லாத மிக மோசமான, இக்கட்டான சூழ்நிலையை அதிமுக இந்த முறை எதிர்கொண்டு உள்ளது. எம்ஜிஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி.. அதிமுக பல்வேறு சவால்களை எதிர்கொண்டு உள்ளது. ஆனால் இந்த இரண்டு தலைவர்களுக்கும் இருந்த வலிமையான தோற்றம், மக்கள் ஆதரவு ஆகியவை, இந்த சவால்களை முறியடித்து கட்சியை மக்களிடம் கொண்டு செல்ல உதவியாக இருந்தது.

அப்படி ஒரு வசீகரமான தலைவர்.. எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட கூடிய தலைவர்தான் தற்போது அதிமுகவில் மிஸ்ஸிங். லோக்சபா தேர்தலில் படுதோல்வி.. சட்டசபை தேர்தலில் தோல்வி.. உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத அளவிற்கு தோல்வி என்று மிக மோசமான தோல்விகளை அடுத்தடுத்து அதிமுக சந்தித்து உள்ள நிலையில்தான் இந்த ஆண்டுவிழாவை அக்கட்சி கொண்டாடுகிறது.
எடப்பாடி பழனிசாமி கோஷ்டி.. ஓ பன்னீர்செல்வம் கோஷ்டி.. சசிகலா ஆதரவாளர்கள்.. டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் என்று 4 கோஷ்டிகளாக அதிமுக உடைந்து.. சிதறி.. துண்டு துண்டாகி உள்ள நிலையில்தான் இந்த ஆண்டுவிழா வந்துள்ளது. கட்சியில் இருந்து அடுத்தடுத்து மூத்த தலைவர்கள் வெளியேறுவது, பல்வேறு நிர்வாகிகள் நீக்கப்படுவது, அணிகள் மாறுவது, பல்வேறு வழக்குகளுக்காக உச்ச நீதிமன்ற படியேறுவது என்று அதிமுக மிக மோசமான நிலையை அடைந்து உள்ளது.
ஒரு கட்சி என்பது மேல்மட்டத்தில் நாம் காணும் தலைவர்கள் மட்டுமல்ல. கீழ்மட்டத்தில் இருக்கும் தொண்டர்களையும் சேர்த்ததுதான் கட்சி. எம்ஜிஆர் தொடங்கும் போதே இது தொண்டர்களுக்கான கட்சி என்று சொல்லிவிட்டுத்தான் தொடங்கினார். ஆனால் அதே கட்சியில்தான் தற்போது தொண்டர்கள் உச்சபட்ச சோர்வை அடைந்துள்ளனர். அடுத்தடுத்து நடக்கும் மோதல்கள்தான் "கட்சி இந்த நிலைமைக்கு போய்விட்டதே" என்று கலக்கம்
அதிமுகவில் நடக்கும் விஷயங்கள் சரியாக இல்லை. தலைமை மீது அடிமட்ட தொண்டர்கள் அப்செட்டில் இருக்கிறார்கள் என்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா கூட சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

இது தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் முன்னாள் எம்எல்ஏ ஜெசிடி பிரபாகர் தி இந்து ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், அதிமுகவில் இதுவரை 3 மிகப்பெரிய பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளது. முதல்முறை எம்ஜிஆர் அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்ட போது பிரச்சனை ஏற்பட்டது. அதன்பின் எம்ஜிஆர் மறைவால் ஜானகி - ஜெயலலிதா அணிகள் பிரிந்த போது பிரச்சனை ஏற்பட்டது.
அதன்பின் தற்போது ஜெயலலிதா மறைவால் ஓபிஎஸ் - எடப்பாடி என்று இரண்டு பிரிவாக கட்சி பிரிந்து கிடக்கிறது. அதிமுக பல்வேறு கஷ்டங்களை கடந்து இருக்கிறது, என்று தெரிவித்து உள்ளார்.
அதிமுகவில் தற்போது நடக்கும் மோதல்கள் இன்னும் எத்தனை காலத்திற்கு நீடிக்க போகிறது என்பதும் தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தாலும் மோதல் முடிவிற்கு வருமா? பிரிந்த தலைகள் இணையுமா என்ற கேள்வி ஒவ்வொரு தொண்டனுக்கும் எழுந்து உள்ளது. அதிலும் கோஷ்டி மோதல் கைமீறி போய் சாதி மோதலாக வெடித்து உள்ளதும் தொண்டர்களை கலங்கடித்து உள்ளது.
அதெல்லாம் போக தமிழ்நாட்டில் டாப் கட்சியாக இருந்த அதிமுகவை "டெல்லி" டாப் கட்டுப்படுத்துவதையும் தொண்டர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
ஈகோ.. யார் பெரியவர் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம்.. அதிகார ஆசை.. எல்லாம் சேர்ந்து அதிமுகவை கூறு போட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பெரிதாக வாக்கு வங்கி கூட இல்லாத பாஜக எல்லாம் தங்களை எதிர்க்கட்சி என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்குத்தான் அதிமுகவின் நிலை சரிந்து உள்ளது.
மோதல்களை எல்லாம் மறந்து மீண்டும் அதிமுக பழைய நிலையை அடைய வேண்டும்.. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று ஜெயலலிதா உரைத்த அதிமுகவாக கட்சி மீண்டும் உருவெடுக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு ரத்தத்தின் ரத்தங்களின் வேண்டுகோளாக இருக்கிறது. ஆனால் அதை மேலிடத்தில் அடித்துக்கொள்ளும் தலைவர்கள் "செய்வார்களா.. செய்வார்களா" என்பதே தற்போது பெரிய கேள்வியாக உள்ளது.












Click it and Unblock the Notifications