சொல்லிவைத்தார் போல் ஒரே மாதிரி கணிப்புகள்.. இந்த 10 தொகுதிகளில் அதிமுக வெற்றி கன்பார்ம்!
சென்னை: தொகுதி வாரியாக நடந்த கருத்துக்கணிப்புகளில் அதிமுகவிற்கு தென்காசி, அம்பாசமுத்திரம், சங்கரன் கோவில், நாகப்பட்டினம், சிதம்பரம், பாலக்கோடு, ஆலங்குளம், மேலூர், நிலக்கோட்டை, மதுரை மேற்கு உள்பட 10 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உறுதி என்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் சட்டச்பை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் முட்டி மோதுகின்றன.
திமுக தலைமையில் ஒரு அணி,அதிமுக தலைமையில் ஒரு அணி, அமமுக தலைமையில் ஒரு அணி, மக்கள் நீதிமய்யம் தலைமையில் ஒரு அணி, நாம் தமிழர் கட்சி தனியாக என ஐந்து முனைப்போட்டி நிலவுகிறது.
மூன்று கணிப்புகள்
இந்நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் கடந்த ஒரு வாரமாக வெளியாகி வருகின்றன. மாலை முரசு டிவி , சத்தியம் டிவி மற்றும் தந்தி டிவி இந்த மூன்று தொலைக்காட்சிகள் தமிழகத்தில் தொகுதிவாரியாக யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளன. இதில் சத்தியம் டிவி முழுமையாக ஒரே நாளில் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டது. மாலை முரசு மற்றும் தந்தி டிவி ஆகியவை உறுதியாக கொஞ்சம் கொஞ்சமாக கருத்துக்கணிப்பு முடிவுகளை நாள்தோறும் வெளியிட்டு வருகின்றன.
திமுக முன்னிலை
இதுவரை வெளியான எல்லா கருத்துக்கணிப்பு முடிவகளுமே திமுகவே அதிக இடங்களை வெல்லும் என்று கூறுகின்றன. அதிமுக குறைவான இடங்களிலயே வெல்ல வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றன. இதனிடையே திமுக முன்னிலையில இருந்தாலும் அதிமுக திமுக இடையே இழுபறியில் பல தொகுதிகள் உள்ளதாகவும் கருத்துக்கணிப்புகள் கூறியிருக்கின்றன.
அதிமுகவிற்கு எவை
சென்னை, திருச்சி, மதுரை, கோவை, விழுப்புரம் என எல்லா மண்டலங்களிலும் திமுகவிற்கே அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. எனினும் இதுவரை வந்த மாவட்ட வாரியாக கருத்துக்கணிப்புகள் எல்லாமே ஒரு விஷயத்தை உறுதி செய்திருக்கின்றன. அதிமுகவிற்கு வெற்றிவாய்ப்பு உள்ள தொகுதிகளை ஒரே மாதிரியே கணித்துள்ளன. கொஞ்சம் கொஞ்சம் வேறுபாடு உள்ளதே தவிர பல தொகுதிகளில் ஒற்றுமை காணப்படுகிறது.
அதிமுக வெற்றி
இதுவரை தொகுதி வாரியாக வெளியான பல்வேறு கருத்துக்கணிப்புகளில் அதிமுகவிற்கு தென்காசி, அம்பாசமுத்திரம், சங்கரன் கோவில், நாகப்பட்டினம், சிதம்பரம், பாலக்கோடு, ஆலங்குளம், மேலூர், நிலக்கோட்டை, மதுரை மேற்கு உள்பட 10 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உறுதி என்று கூறப்பட்டுள்ளது.
கேபி அன்பழகன் வெற்றி
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் அதிமுகவிற்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் அமைச்சர் செல்லூர் ராஜூ போட்டியிடும் மதுரை மேற்கு தொகுதியில் அதிமுகவின்வெற்றி உறுதி என்கிறது கணிப்புகள். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் ஐந்தாவது முறையாக போட்டியிடும் அமைச்சர் கேபி அன்பழகன் வெற்றி (அதிமுக வெற்றி) உறுதி என்றும் கூறுகின்றன. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளர் பாண்டியன் வெற்றி உறுதி என்றும், நாகப்பட்டினத்தில் அதிமுக வேட்பாளர் தங்க கதிரவன் வெற்றி உறுதி என்றும் கணிப்புகள் சொல்கின்றன.