36000.. 2300.. 2.. எடப்பாடி பலே கணக்கு.. இந்த முறை "அந்த" போட்டோவுக்கு இடமில்லை.. கலக்கத்தில் ஓபிஎஸ்
சென்னை: அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடக்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகிறார்கள்.
அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்து உள்ளது. ஓ பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் கிடையாது. இதனால் இந்த நிகழ்விற்கு சட்ட ரீதியாக அவர் தடை வாங்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரமாக நம்புகிறது.
வானகரத்தில் இருக்கும் ஸ்ரீ வாரு மண்டபத்திற்கு வெளியே திறந்த வெளி மண்டபத்தில் பெரிய மேடை அமைக்கப்பட்டு கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

36000 சதுர அடி
இந்த பொதுக்குழு விழா மேடை திறந்த வெளியில் தற்போது அமைக்கப்பட்டு வருகிறது. திறந்த வெளி என்பதால் கடந்த 4 நாட்களாக அங்கு இருக்கும் செடிகளை நீக்கிவிட்டு, தளத்தை சமப்படுத்தும் பணிகள் நடந்து வந்தன. அதன்பின் மேடை அமைக்கும் பணிகள் நடந்தன. மொத்தமாக 36000 சதுர அடிக்கு இந்த மொத்த நிகழ்வும் நடக்கும் கூடம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பந்தல் போடும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

2300 பேர் வாக்கு
இந்த பொதுக்குழுவில் 5000 பேர் வரை கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் கிட்டத்தட்ட 2400 பேர் வரை அதிகாரபூர்வ பொதுக்குழு உறுப்பினர்கள். மற்றவர்கள் வெளியே நிற்க வைக்கப்பட உள்ளனர். இந்த 2300 பேரில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பேர் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்று வாக்களிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆகும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

2 அடி உயர ஏற்பாடு
ஜூலை இரண்டாம் வாரம் திடீரென மழை வந்துவிட கூடாது என்பதால் அதற்கு ஏற்றபடி மேடை உருவாக்கப்பட்டுள்ளது. இருக்கைகள் உள்ள மேடை 2 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இன்னொரு பக்கம் மேலே மூத்த உறுப்பினர்கள் இருக்கும் மேடை 4 அடி உயரத்தில் அமைக்கப்பட உள்ளது. மரபலகைகள் வைத்து அதற்கு ஏற்றபடி பிரம்மாண்ட தயாரிப்புகள் செய்யப்பட்டு வருகின்றன. மழை வந்தாலும் கூட்டம் சிக்கல் இன்றி நடக்கும்.

அலங்கார விளக்கு
அதேபோல் பொதுக்குழு மண்டபத்திற்கு வெளியே இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு அலங்கார விளக்குகள் வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக சிறப்பு விளக்குகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஜூலை 10ம் தேதி மாலையில் இருந்தே இங்கு அலங்கார விளக்குகள் எரிய விடப்படும். அதேபோல் செண்டை, பறை, மேளம், கரகாட்டம், ஒயிலாட்டம் என்று திருவிழா போன்ற பிரம்மாண்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

அந்த போட்டோவிற்கு இடமில்லை
கடந்த முறை பொதுக்குழுவில் நிர்வாகிகளை வரவேற்க ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி போட்டோ இருந்தது. ஆனால் இந்த முறை அந்த போட்டோ இடம்பெறாது. இந்த முறை எடப்பாடி பழனிசாமி போட்டோ மட்டுமே இடம்பெறும். அவரின் போட்டோ ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரின் போட்டோவுடன் இடம்பெறும். ஓ பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் கிடையாது என்பதால் அவரின் புகைப்படம் இடம்பெறாது என்கிறார்கள்.

அசைவ உணவு
அதேபோல் இந்த முறை பொதுக்குழுவில் அசைவ உணவு போடப்படலாம் என்கிறார்கள். கடந்த முறை சைவ உணவு மட்டுமே கொடுக்கப்பட்டது. இது பொதுக்குழு உறுப்பினர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை பலரும் விமர்சனம் செய்து இருந்தனர். இந்த முறை அசைவ உணவு கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஏற்பாடுகளை பார்த்து ஓ பன்னீர்செல்வம் தரப்பு கலக்கத்தில் இருக்கிறதாம். வரும் நாட்களில் மேலும் அவர் தரப்பு நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கலக்கத்தில் ஓபிஎஸ்
நேற்று பொதுக்குழுவிற்கு எதிரான உயர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையில் , நீதிபதிகள், 23 தீர்மானங்கள் தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற கூடாது என பிறப்பித்த இடைக்கால உத்தரவு ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவுக்கு மட்டும் பொருந்தும்... அதன் பின் நடக்கும் பொதுக்குழுக்களுக்கு அல்ல என்று நீதிபதிகள் கூறி இருந்தனர். இதனால் பொதுச்செயலாளர் தொடர்பான தீர்மானம் தனி தீர்மானமாக நிறைவேற்றப்படுமோ என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு கலக்கத்தில் இருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications