நான்தான் உங்க அம்மா.. எடப்பாடிக்கு ஓட்டுப் போடுங்க.. பிறந்த நாளில் திடீரென கேட்ட ஜெயலலிதா குரல்!
சென்னை: கூட்டணியை இன்னும் உறுதி செய்யாத நிலையிலும், லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது அதிமுக. ஜெயலலிதா பேசுவது போல AI தொழில்நுட்பம் மூலம் ஆடியோ உருவாக்கி வெளியிட்டுள்ளது அதிமுக.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கத் தொடங்கியுள்ளன. ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு, பிரச்சார வியூகங்கள் உள்ளிட்டவற்றிற்கு தனித்தனியாக குழுக்களை அமைத்து முழுவீச்சில் பணியாற்றத் தொடங்கியுள்ளன.

லோக்சபா தேர்தலுக்கு கட்சிகள் தீவிரம்: திமுக தலைமையில் ஏற்கனவே உள்ள கூட்டணி இந்த தேர்தலிலும் களம் இறங்குகிறது. இதில் இந்திய ஜனநாயகக் கட்சி பாஜகவில் இணைந்துவிட்டதால் அக்கட்சி திமுக கூட்டணியில் இல்லை. அதேசமயம், மக்கள் நீதி மய்யம் கட்சி புதிதாக திமுக கூட்டணியில் இணைய உள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் உட்பட திமுக கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் தொகுதி விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.
அதிமுகவை பொறுத்தவரை புரட்சி பாரதம் கட்சி, எஸ்.டி.பி.ஐ போன்ற சிறிய கட்சிகள் மட்டுமே அதிமுக கூட்டணியை உறுதி செய்துள்ளன. பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விரைவில் அதிமுக தனது கூட்டணியை உறுதி செய்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா AI ஆடியோ: கூட்டணி பேச்சுகள் ஒருபுறம் இருக்க, அதிமுக மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தேர்தல் பரப்புரைகளை தொடங்கியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளை ஒட்டி அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் குரலில் 'மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்' என அவரது குரலில் பேசியுள்ள ஆடியோ வெளியிடப்பட்டது. இந்த ஆடியோ ஜெயலலிதா பேசுவது போல ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா குரலில் பேசியுள்ளவை: ஜெயலலிதா பேசுவது போன்ற அந்த ஆடியோவில், "வணக்கம். நான் உங்கள் ஜெ.ஜெயலலிதா பேசுகிறேன். உங்களுடன் பேசுவதற்கு ஒரு உன்னத வாய்ப்பை வழங்கி இருக்கும் இந்த தொழில்நுட்பத்திற்கு என் நன்றி. நம்முடைய கழகம் எவ்வளவோ ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருக்கிறது. பெண்களுக்கு தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு, மடிக்கணினி, அம்மா உணவகம் என பலப் பல நல்ல திட்டங்கள் நமது ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தச் சாதனைகளுக்காகவே தமிழக மக்கள் அ.தி.மு.கவை ஆதரித்தார்கள்.
இப்போதோ ஒருபுறம் மத்திய அரசு நம்மை வஞ்சிக்கிறது. மாநில அரசோ ஊழலுக்கு வித்திடும் திராணியற்ற ஆட்சியை நடத்தி வருகிறது. மத்தியில் ஆளும் அரசும் மாநிலத்தில் ஆளும் அரசும் தமிழக நலனுக்கு எதிராக உள்ளனர். என் பிறந்தநாளான இன்று உங்களிடம் நான் கேட்டுக்கொள்வது, அதிமுகவின் மக்களாட்சி மீண்டும் அமைய வேண்டும்.
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 76வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு,
— AIADMK (@AIADMKOfficial) February 24, 2024
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்றைக்கு தகவல் தொழில்நுட்பத்தின் உச்சமாகக் கருதப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)… pic.twitter.com/APuSq7u6AW
மக்களால் நாம்! மக்களுக்காகவே நாம்!: எனவே நம் கழகத் தொண்டர்கள் அனைவரும் என் வழி நின்று தலைமை பொறுப்பேற்றிருக்கும் சகோதரர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் கரத்தை நீங்கள் வலுப்படுத்த வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். மக்களால் நாம்! மக்களுக்காகவே நாம்!" என ஜெயலலிதா குரலில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தேர்தல் பரப்புரையை இன்று முதல் தொடங்கிவிட்டோம். தமிழர் உரிமை மீட்போம் தமிழ்நாடு காப்போம் என்பது அதிமுகவின் தேர்தல் முழக்கம். மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும். கூட்டணி தொடர்பாக சிலர் வேண்டுமென்றே விஷம கருத்துகளை பரப்பி வருகின்றனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் விரைவில் வரும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் கூட்டணியை அறிவிப்போம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications