பாஜகவுக்கு எதிராக ஜெயக்குமார், சிவி சண்முகம் வரிசையில் எஸ்பி வேலுமணி.. அண்ணாமலை மீது கடும் தாக்கு!
சென்னை: பேரறிஞர் அண்ணா குறித்து பேச தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தகுதி இல்லை என அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான வேலுமணி பகிரங்கமாக சாடியுள்ளார்.
பேரறிஞர் அண்ணா குறித்து மட்டுமல்ல.. அதிமுக தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பல விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்த விமர்சனங்களுக்கு அதிமுகவின் மூத்த தலைவர்களான ஜெயக்குமார், சிவி சண்முகம், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் தொடர்ந்து பதிலடி கொடுத்து வந்தனர்.

தற்போது அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ்.பி.வேலுமணியும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார். இது தொடர்பாக வேலுமணி கூறுகையில், ஜெயலலிதா, பேரறிஞர் அண்ணா பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி இல்லை; அண்ணா பற்றி விமர்சனங்கள் முன்வைப்பதை ஏற்க முடியாது. அண்ணா குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை அண்ணாமலை கூறி வருகிறார் என்றார்.
மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியில்தான் எங்கள் கூட்டணி அமையும் என்றும் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார்.கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் வேலுமணி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா போன்றவர்கள் பெரிய தலைவர்கள். இந்த நாடு சிறப்பாக இருக்க தமிழ்நாட்டுக்காக உழைத்த தலைவர்கள். அவர்களைப் பற்றி தேவை இல்லாமல் பேசி இருக்கக் கூடாது. அண்ணா குறித்து திமுக பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
ஆனால் ஜெயலலிதா குறித்து பேசிய உடன் உடனடியாக தீர்மானம் நிறைவேற்றினார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அண்ணாவை பற்றி பேசிய உடன், கொள்கைதான் முக்கியம்.. கூட்டணி முக்கியம் அல்ல என்றார்.
முன்னதாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் எஸ்பி வேலுமணி, எங்களுக்கு தலைவர் எடப்பாடி பழனிசாமிதான். பாஜகவுக்கு எதிராக நான் பேசலை.. தங்கமணி பேசலைன்னு யார் ட்விட்டரில் போடுறாங்கன்னு கண்டுபிடிச்சுட்டோம்.. எங்களுக்கு தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமிதான். அவரது கருத்துதான் எங்கள் கருத்து. அதைவிட்டுவிட்டு வேலுமணி பேசலை, தங்கமணி பேசலைன்னு கிளப்பி விடுறது யாருன்னு தெரியும்? ஐடி விங் கண்டுபிடிச்சாங்க.. எங்களுக்கு எதிரி திமுக. யார் கூட்டணியில் இருந்தாலும் எங்கள் தன்மானத்தை விட்டுக் கொடுக்கமாட்டோம்.
இன்றைக்கு இருக்கக் கூடிய சூழலில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வரவேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணிதான் 40 தொகுதிகளிலும் வெல்லும். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. எடப்பாடி பழனிசாமி அற்புதமான ஆட்சியை நடத்தியவர். அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொண்ட ஆட்சியை நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி என்றார்.












Click it and Unblock the Notifications