“ஒருங்கிணைந்த அதிமுக வெகு விரைவில்”.. செங்கோட்டையன் கொடுத்த பரபர அப்டேட்!
சென்னை: "விரைவில் அதிமுக ஒருங்கிணைப்பு நிகழும், நல்ல முடிவாக இருக்கும். அதிமுகவை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன." என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும், "பாஜக எப்போதும் என்னை அழைத்து அறிவுறுத்தல் வழங்கியது இல்லை." என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார். அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என பாஜக அறிவுறுத்தியதாக கடந்த 7 ஆம் தேதி கூறியிருந்த நிலையில் இன்று இவ்வாறு கூறியுள்ளார்.

தவெக கட்சியுடன் கூட்டணி வைக்க உள்ளீர்களா என்ற கேள்வி தற்போதைக்கு எந்த கருத்தும் சொல்ல இயலாது என சுறினார்.
அதிமுக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என செய்தியாளர் சந்திப்பு நடத்தி அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது கட்சி பொறுப்புகள் அனைத்தையும் பறித்து உத்தரவிட்டார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து மதுரையில் நடந்த தேவர் குரு பூஜை நிகழ்வில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருடன் சேர்ந்து பங்கேற்றார் செங்கோட்டையன். இதனையடுத்து, கட்சியில் இருந்தே செங்கோட்டையனை நீக்கி உத்தரவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
இந்நிலையில் இன்று, மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், "அதிமுகவை ஒருங்கிணைப்பது தொடர்பாக பாஜக ஒருபோதும் எனக்கு அறிவுறுத்தல் கொடுத்ததில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்தியாளர் சந்திப்பில் செங்கோட்டையன் பேசுகையில், "ஒருங்கிணைந்த அதிமுகவை விரைவில் எதிர்பார்க்கலாம். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நல்ல முடிவு வரும். அதிமுகவை ஒருங்கிணைப்பது தொடர்பாக பாஜக என்னை எப்போதும் அழைத்து அறிவுறுத்தல் கொடுத்தது இல்லை.
நான் ஒருமுறை அமித்ஷாவை சந்தித்தேன். அவரிடம் பேசியதை வெளியே சொல்வது அரசியல் நாகரீகமாக இருக்காது. அவர் ஒரு முறைதான் அழைத்தார். அடுத்து இருமுறை நானே சென்று சந்தித்தேன்." எனத் தெரிவித்துள்ளார் செங்கோட்டையன்.
மேலும், "விஜய்யுடன் கூட்டணி தொடர்பாக இப்போது எதுவும் சொல்ல இயலாது. எல்லோரும் ஒன்றிணையும் காலம் விரைவில் வரும். பொறுத்திருந்து பாருங்கள்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications