புறக்கணிப்பு..இருட்டடிப்பு..கருப்பு மாஸ்க் அணிந்து சட்டசபைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள்
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் இன்றைய தினம் சட்டசபைக்கு கருப்பு மாஸ்க் அணிந்து வந்திருந்தனர். எதிர்கட்சி எம்எல்ஏக்கள் பேசுவதை நேரலையில் ஒளிபரப்பாமல் இருட்டடிப்பு செய்வதாகவும் அதிமுக எம்எல்ஏக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சட்டசபையில் நேற்றைய தினம் கேள்வி நேரத்திற்குப் பிறகு நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விருத்தாசலம் சிறுமி பாலியல் சம்பவம் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அதற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி பேசியது நேரலையில் ஒளிபரப்பாகவில்லை. அதே நேரத்தில் சட்டசபையில் முதல்வர் பதில் அளித்து பேசியது நேரலையில் ஒளிபரப்பானது. எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சு நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை என அ.தி.மு.க. கொறடா எஸ்.பி. வேலுமணி சட்டசபையில் பேசினார்.
பிரதான எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு தொடர்ந்து நேரலையில் காட்டப்படுவதில்லை என்றார். இதற்கு சபாநாயகர், 'இது தொடர்பாக உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி என்னிடம் கூறியிருக்கிறார், நான் செயலாளரிடம் அது குறித்து விசாரிக்க சொல்லி இருக்கிறேன்' என்றார்.
அதனை தொடர்ந்து பேசிய எஸ்.பி.வேலுமணி, எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சு நேரலையில் தடை செய்யப்பட்டதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தார். அதன் பின்னர் அ.தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தான் பேசுவது புறக்கணிக்கப்படுவதாகவும் எதிர்கட்சியினர் கேள்வி கேட்பதை ஒளிபரப்பாமல் அமைச்சர்கள், முதல்வர் சொல்லும் பதிலை மட்டும் ஒளிபரப்புவது எப்படி சரியாகும் என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.

அதன்பின்னர் சட்டசபையில் நேரலை தொடர்பாக காரசாரமாக விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, நான் பேசுவதை நேரலை செய்வதில் என்ன பிரச்சனை? என கேள்வி எழுப்பினார். அப்போது சபாநாயகர் அப்பாவு பேசும்போது, நேரலை வழங்குவதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும், சட்டசபை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும் கவன ஈர்ப்புகள் இனி நேரலை செய்யப்படும் என்றும் அறிவித்தார்.
இந்த நிலையில் எதிர்க்கட்சித்தலைவர் பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்யாததற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபைக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று கருப்பு மாஸ்க் அணிந்து வந்துள்ளனர். சட்டசபையின் நேரலையில் எதிர்க்கட்சிகளை இருட்டடிப்பு செய்வதாக அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications