திமுகவை விடாமல் உலுக்கி எடுக்கும் எடப்பாடி.. சென்னையில் நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரதம்!
சென்னை: கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி வழங்காததைக் கண்டித்து சென்னையில் நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 69 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விஷச்சாராய விற்பனையில் தொடர்புடைய 21 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர் பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி தொடர்பாக ஆய்வு செய்து இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கவும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து கோரிக்கை விடுத்தார். அவருடன் 60-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களும் உடன் சென்றனர். நியாயமான விசாரணை நடைபெறுவதை அரசு உறுதிசெய்ய, ஆளுநர் வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி சம்பவம் காரணமாக அதிமுக எம்.எல்.ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்று வந்தனர். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறி விட்டதாகவும், இதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்றும் அதிமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இன்றும் கறுப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக உறுப்பினர்கள், கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும், சட்டப்பேரவையின் மாண்பை சீர்குலைத்ததாக கூறி நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி வழங்காததைக் கண்டித்தும், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரியும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை சென்னையில் உண்ணாவிரத அறப்போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், 'கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து நேர்மையான விவாதம் மறுக்கப்பட்டு, அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது அடிப்படை ஜனநாயகத்திற்கு விரோதமானது! எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மடைமாற்ற அரசியலால் கடந்துவிட முயற்சிக்கும் திமுக அரசிற்கு எனது கடும் கண்டனம்.
எனவே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி வழங்காததைக் கண்டித்தும், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரியும் எனது தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை (27.06.2024 - வியாழக்கிழமை) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அடையாள உண்ணாவிரத அறப்போராட்டம் மேற்கொள்ளவுள்ளோம். கள்ளச்சாராய மரணங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அஇஅதிமுகவின் போராட்டம் தொடரும்' எனத் தெரிவித்துள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அதிமுகவினர் அனுமதி கேட்ட நிலையில், எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே உண்ணாவிரத போராட்டத்தை நடத்த காவல்துறை அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து, எழும்பூரில் நாளை உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications